Published : 08 Dec 2019 08:09 AM
Last Updated : 08 Dec 2019 08:09 AM

சர்வதேச சிவில் விமான போக்குவரத்து நிறுவன 75-வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்

சர்வதேச சிவில் விமான போக்குவரத்து நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழா சென்னையில் கொண்டாடப்பட்டது.

உலகம் முழுவதுள்ள விமான போக்குவரத்தை கட்டுப்படுத்தி, அவற்றை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல் பணிகளை மேற் கொள்ள சர்வதேச சிவில் விமான போக்குவரத்து நிறுவனத்தை (ஐசிஏஓ) ஜக்கிய நாடுகள் சபை 1944-ம் ஆண்டு உருவாக்கியது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட நாளான டிசம்பர் 7-ம் தேதி, 1996 முதல் ஆண்டுதோறும் ‘சர்வதேச விமான போக்குவரத்து தினமாக’ கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐசிஏஓ அமைப்பு தொடங்கப்பட்டு தற்போது 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன.

இதையடுத்து விண்வெளி, வானவியல் மற்றும் விமான போக்குவரத்து நிறுவனம் (ஐஏஏஏ), இந்திய விமான நிலையங்களின் ஆணையம், ஐசிஏஓ, ‘இந்து தமிழ்’ நாளிதழ் ஆகிய அமைப்புகள் சார்பில் 75-வது ஆண்டு விழா சென்னை விமான நிலையத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.

இதன் தொடக்க விழாவில் சென்னை விமான நிலையத்தின் இயக்குநர் சி.வி.தீபக் பேசியதாவது:

சர்வதேச சிவில் விமான போக்குவரத்து நிறுவனம்தான் உலகம் முழுவதும் உள்ள விமான போக்குவரத்தை வழிநடத்தி வருகிறது.

அதன் வைரவிழா நம் நாட்டில் விமரிசையாக கொண்டாடப் படுவது மகிழ்ச்சி. அதேநேரம் விமான போக்குவரத்துத் துறை தொடர்பான போதிய விழிப்புணர்வு இளைஞர்களிடம் உருவாக்கப்பட வேண்டும். ஏரோநாட்டிக்ஸ் துறைக்கு சிறந்த எதிர்காலம் உள் ளது. குறைந்த கட்டண விமான சேவை வந்தவுடன் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, இளைஞர்கள் ஆர்வத்துடன் இந்த துறையை நோக்கிவர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஐஏஏஏ அமைப்பின் துணைத் தலைவர் டி.கே.சுந்தரமூர்த்தி பேசும் போது, ‘‘விமான போக்குவரத்துத் துறை தற்போதைய நிலையைவிட 5 மடங்கு வளர்ச்சி அடைய இருக்கிறது. எனவே, இந்த துறையில் இருக்கும் வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

தொடர்ந்து இந்துஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவர் திட்ட இயக்குநர் சி.எஸ்.கருணாகரன் பேசியதாவது:

நம்நாட்டில் பறக்கும் விமானங் களில் 20 சதவீதம்தான் நிறுவனங் களுக்கு சொந்தமானவை. ஏர் இந்தியா தவிர மற்ற நிறுவனங் கள் குத்தகை முறையில் விமானங் களை வாங்கி பயன்படுத்துகின்ற னர். இதனால் ஆண்டுதோறும் பராமரிப்பு செலவின வகையில் ரூ.5 ஆயிரம் கோடி வரை வெளி நாடுகளில் முதலீடு செய்யப்படு கிறது இதைத் தடுத்து உள்நாட்டி லேயே அப்பணிகளை மேற்கொள் வதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கிடையே சர்வதேச விமானப் போக்குவரத்து தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு விநாடி வினா மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் நிகழ்ச்சி ஒருங் கிணைப்பாளர் முருகானந்தம், இந்திய விமான நிலையங்களின் ஆணைய சங்கத் தலைவர் சி.ஜார்ஜ், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x