Published : 07 Dec 2019 06:57 PM
Last Updated : 07 Dec 2019 06:57 PM

திருமணமாகாத ஆணும், பெண்ணும் விடுதியில்  ஒரே அறையில் தங்கக்கூடாது என்று சட்டத்தில் கூறவில்லை: சென்னை உயர் நீதிமன்றம்

திருமணமாகாத ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றம் என்று எந்த சட்டமும் கூறவில்லை அதை வைத்து நடவடிக்கை எடுத்தது தவறு என உயர் நீதிமன்றம் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

கோவையில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதி சமீபத்தில் மாவட்ட நிர்வாகத்தால் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அதற்கு மாவட்ட நிர்வாகம் சொன்ன காரணம் தனியார் விடுதியில் ஒரு அறையில் திருமணமாகாத ஆணும் பெண்ணும் தங்கியிருந்தனர், மற்றொரு அறையில் மதுபான பாட்டில்கள் இருந்தது, ஆகவே விடுதிக்கு போலீஸ் மற்றும் வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் விடுதி நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவைப்படித்த நீதிபதி “பத்திரிகைகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகளை மட்டுமே அடிப்படையாக கொண்டு விடுதி நிர்வாகத்திடம் எந்த விளக்கமும் கேட்காமல் மாவட்ட நிர்வாகம் விடுதிக்கு சீல் வைத்தது, இது இயற்கை நீதிக்கு எதிரானது”. என கருத்து தெரிவித்தார்.

காவல்துறை தரப்பில் விடுதியில் சோதனை நடந்தபோது ஒரு திருமணமாகாத ஆணும், ஒரு பெண்ணும் தனியே அறையில் தங்கி இருந்தனர், மது விற்பனைக்கான உரிமம் எதுவும் விடுதி நிர்வாகம் பெறாத நிலையில் மற்றொரு அறையில் மது பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டது. இதனாலேயே விடுதிக்கு சீல் வைத்ததாக விளக்கமளிக்கப்பட்டது.

காவல்துறையினரின் விளக்கத்தை ஏற்காத நீதிபதி, திருமணமாகாத ஒரு ஆணும்,ஒரு பெண்ணும் ஒரே அறையில் தங்கக் கூடாது என சட்டம் ஒன்றும் இல்லாத நிலையில், திருமணமாகாத இருவரும் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு இருக்கிறது? எனக் கேள்வி எழுப்பினார்.

திருமணமாகாத ஆணும் பெண்ணும் 'லிவிங் டூ கெதர்’ முறையில் சேர்ந்து வாழ்வது எப்படி குற்றமாக கருத முடியாதோ, அதேபோன்று இருவரும் விடுதியில் ஒரே அறையில் தங்குவதும் குற்றமாகாது, என தெளிவுப் படுத்தினார்.

விடுதி அறையில் மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டதை வைத்து விடுதி நிர்வாகம் மது விற்பனை செய்கிறார்கள் என்று கூறி விட முடியாது எனவும், தெரிவித்த நீதிபதி, தமிழ்நாடு மதுபான சட்டப்படி, தனி நபர் ஒருவர், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானம் லிட்டர், பீர் -7.8 லிட்டர், 9 -லிட்டர் ஒயின்' என வைத்துக்கொள்ள அனுமதி வழங்கி உள்ளதை சுட்டிக்காட்டி விடுதியில் மதுபான பாட்டில்கள் இருந்தது குற்றமில்லை எனவும் தெளிவுபடுத்தினார்.

மேலும் இந்த விடுதியை மூடும்போது உரிய சட்ட விதிமுறைகள் பின்பற்றாததல், விடுதிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோவை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x