

குமரிக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. சென்னையில் அதிகாலையில் மழை பெய்தது.
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலும் இன்று காலையில் லேசான மழை பெய்தது. குமரிக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் சனிக்கிழமை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்த நிலையில், இன்று அதிகாலையில் சென்னையில் தூறல் போட ஆரம்பித்தது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
“தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. வட கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் சாதகப் போக்கின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியில் 6 செ.மீ. மழையும், திருத்துறைப்பூண்டியில் 5 செ.மீ. மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் பகுதிகளில் 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்ப நிலையாக 29 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்ப நிலையாக 25 டிகிரி செல்சியஸ் பதிவாகும்”.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.