Published : 07 Dec 2019 08:16 AM
Last Updated : 07 Dec 2019 08:16 AM

போலி விளையாட்டு சான்றிதழ் கொடுத்து போலீஸ் பணியில் சேர முயன்ற மேலும் 3 பேர் கைது: தமிழகம் முழுவதும் மேலும் பலர் சிக்க வாய்ப்பு

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் போலி விளையாட்டு சான்றிதழ் வழங்கி போலீஸ் பணிக்கு தேர்வான மேலும்3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

போலீஸ் பணிக்கான தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் விளையாட்டு இட ஒதுக்கீட்டில் போலி சான்றிதழ் வழங்கி பணியில் சேர்ந்ததாக எஸ்பி அலுவலக தொலைபேசி எண்ணில் ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட தனிப்படை போலீஸார் விசாரணை செய்தனர்.

இதில் புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வரும் கமுதியைச் சேர்ந்த மணிராஜன் (23) போலி சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்தது தெரியவந்தது. அவரையும், அவருக்கு உடந்தையாக இருந்த கமுதியைச் சேர்ந்த ராஜீவ்காந்தி (30), சென்னைவளசரவாக்கத்தைச் சேர்ந்த கபடிபயிற்சியாளர் சீமான்(55) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த போலீஸ் பணிக்கான தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 6 பேர் போலி விளையாட்டு சான்றிதழ் கொடுத்து தேர்வில் கலந்து கொண்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக கமுதி அருகே கே.வேப்பங்குளத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் முத்துமணி (23), முதுகுளத்தூரைச் சேர்ந்த மோகன்தாஸ் மகன் ராஜசேகரன்(25) ஆகியோரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இருவரும் தற்போது போலீஸ் பணிக்கு தேர்வாகியுள்ளனர். இவர்கள் ராஜீவ் காந்தி மூலம் தலா ரூ.30 ஆயிரம் கொடுத்து சீமானிடம் போலி விளையாட்டு சான்றிதழ் வாங்கி சமர்ப்பித்துள்ளனர்.

இதனிடையே, கடலாடி வட்டம்மாரந்தை அருகேயுள்ள ஏ.புனவாசலைச் சேர்ந்த ஆண்டி மகன் தவமுருகன் (22) என்பவர், சீமானிடம் ரூ.17 ஆயிரம் கொடுத்து, தேசிய கபடி போட்டியில் பங்கேற்றதாக போலி சான்றிதழ் பெற்றுள்ளார். இவர் இந்தோ-திபெத் எல்லை காவல்படை பணிக்கான தேர்வுக்கு போலி சான்றிதழை சமர்ப்பித்து பணிக்கு தேர்வாகியுள்ளார். இவரையும் போலீஸார் கைது செய்தனர்.

இது தவிர, போலி விளையாட்டு சான்றிதழ் மூலம் போலீஸ் பணிக்கு தேர்வாகியுள்ள மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கபடி பயிற்சியாளர் சீமான், தமிழகம் முழுவதும் காவலர் பணி,ராணுவம், துணை ராணுவம் போன்ற பணிகளில் விளையாட்டு இடஒதுக்கீட்டில் சேர போலி சான்றிதழ் வழங்கியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் கூறும்போது, “தனிப்படை போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சான்றிதழ் மோசடி சம்பவத்தில் மேலும் பலர்சிக்க வாய்ப்புள்ளது. கபடி பயிற்சியாளர் சீமான், அமெச்சூர் கபாடி அசோசியேஷன் என்ற பெயரில் பலருக்கு மாநில, தேசிய அளவில் கபடி போட்டியில் பங்கேற்றதாக சான்றிதழ் வழங்கியுள்ளார். சீமான், ஆய்வாளர் வேடத்தில் தனது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அவர் தன்னை ஒரு காவல் ஆய்வாளராக காட்டிக்கொண்டு இளைஞர்களை நம்ப வைத்து, காவலர் பணிக்கு போலி விளையாட்டு சான்றிதழ்களை வழங்கியுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து சீமானிடம் நடத்திய விசாரணையில் அவர் திரைப்படத்தில் ஆய்வாளராக நடித்த புகைப்படம் என்றும், சில திரைப்படங்களில் நடித்துள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது”ள என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x