Published : 07 Dec 2019 08:13 AM
Last Updated : 07 Dec 2019 08:13 AM

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிலை கடத்தல் ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்: பொன் மாணிக்கவேலுக்கு உத்தரவு

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, சிலை கடத்தல் விசாரணை தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு பொன்மாணிக்கவேலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு செயல்படுத்தவில்லை என்று கூறி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுசிறப்பு அதிகாரியாக இருந்த பொன்மாணிக்கவேல், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதற்கிடையில், பொன் மாணிக்கவேலின் பதவிக் காலம் கடந்த 30-ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தன் பதவிக் காலத்தை நீட்டிக்க உத்தரவிடக் கோரி அவர் தொடர்ந்த வழக்கு மற்றும் இதே கோரிக்கையுடன் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு ஆகியவை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக பொன் மாணிக்கவேலை மீண்டும் நியமிக்கக் கோரி தான் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் முறையிட்டார்.

அப்போது தமிழக அரசு தரப்பில், ‘‘சிலை கடத்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், இதில்உயர் நீதிமன்றம் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்கக் கூடாது. தவிர, பொன் மாணிக்கவேல் தன்னிச்சையாக செயல்பட்டார். அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கமுடியாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்துள்ளதால், அவரை மறு நியமனம் செய்யமுடியாது’’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிலை கடத்தல் விசாரணை தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு பொன் மாணிக்கவேலுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடியும் வரை,இந்த வழக்குகளில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும்தெரிவித்த நீதிபதிகள், பொன்மாணிக்கவேல் தனது தரப்பு வாதங்களை எழுத்துபூர்வமாக தாக்கல்செய்ய உத்தரவிட்டு விசார ணையை தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x