

மத்திய அரசை விமர்சிப்பதால் சிறைக்குப் போவது பற்றி கவலையில்லை என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அம்பேத்கர் நினைவு தினம் இன்று (டிச.6) கடைப்பிடிக்கப்பட்டது. இதில் முதல்வர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அம்பேத்கர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் பேசும்போது, "மத்திய அரசை எதிர்த்துப் பேசுபவர்கள், எழுதுபவர்கள், விமர்சனம் செய்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பப்படும் அராஜக ஆட்சி நடைபெறுகிறது. என்னைப் போன்று ப.சிதம்பரமும் வாய்த்துடுக்கோடு அனைத்தையும் எதிர்க்கின்றார். மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் பொருளாதார வளர்ச்சி சரிந்துள்ளதை எடுத்துக் கூறினார். அதனால்தான் ப.சிதம்பரம் 107 நாட்கள் சிறையில் வைக்கப்பட்டு இருந்தார்.
மத்திய அரசை விமர்சிப்பதால் சிறைக்குப் போவது பற்றி எனக்குக் கவலையில்லை. மத்தியில் மக்களை திசை திருப்பும் ஆட்சி நடக்கிறது" என்று விமர்சித்தார்