Published : 06 Dec 2019 01:48 PM
Last Updated : 06 Dec 2019 01:48 PM

டிச.8  திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் கூட்டம்

கோப்புப் படம்

உள்ளாட்சித் தேர்தல் நடப்பதையொட்டி திமுக சார்பில் வரும் டிச.8 மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. டிச.27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்துவதாகவும், ஊராட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தேர்தல் மாநகராட்சி, நகராட்சிகளுக்குத் தேர்தல் இல்லை என அறிவித்தனர். இன்று முதல் வேட்புமனுத் தாக்கல் என அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

புதிய மாவட்டங்களுக்கு வார்டு மறுவரையறை இல்லாமல் நடத்துவது, இட ஒதுக்கீடு இல்லாமல் நடத்துவது குறித்து ஆட்சேபிக்கப்பட்டது. இதையடுத்து 9 புதிய மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம், புதி அறிவிப்பாணையை வெளியிடவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று காலை உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடக்கிறது. இதேபோன்று திமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை (8-ம் தேதி) அன்று மாலை 5 மணி அளவில் தி.நகரில் உள்ள ஹோட்டல் அக்கார்டில் நடப்பதாக அறிவிக்கப்பட்டு அனைவரும் தவறாமல் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் வேட்பாளர்களை நிறுத்துவது, கூட்டணிக் கட்சிகளுக்கான ஒதுக்கீடு, தேர்தல் நடத்தும் யுக்தி உள்ளிட்ட பல விஷயங்கள் பேசப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x