Published : 06 Dec 2019 12:05 PM
Last Updated : 06 Dec 2019 12:05 PM

உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புகள் வாபஸ்: மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்காக ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவிப்புகளை மாநிலத் தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் முதற்கட்டமாக 27 மற்றும் 30 தேதிகளில் நடத்தப்படும் என, கடந்த 2-ம் தேதி மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, வேட்புமனுத்தாக்கல் டிச.6, வேட்பு மனுத்தாக்கல் கடைசி நாள் டிச.13, வேட்பு மனு பரிசீலனை டிச.16 , வேட்புமனு வாபஸ்பெற இறுதி நாள் டிச.18, வாக்கு எண்ணிக்கை ஜன.2 அன்று நடைபெறும் என, மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், திமுக தொடர்ந்த வழக்கில், புதிதாக தொடங்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் இன்று (டிச.6) உத்தரவிட்டது. காஞ்சிபுரம், வேலூர், நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய புதிய 9 மாவட்டங்களிலும் நான்கு மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிவிப்புகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. தீர்ப்பின் விவரங்களை முழுமையாகப் படித்தறிந்த பின்னர் இதுகுறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தல் குறித்த புதிய அறிவிப்பாணை இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x