Published : 05 Dec 2019 08:08 PM
Last Updated : 05 Dec 2019 08:08 PM

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் நாளை கூடுகிறது

உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டச் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்த நாளை ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் ஊராட்சிகளுக்கு மட்டும் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 27 மற்றும் 30-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று அதிமுக இரண்டிலும் வெற்றி பெற்று உற்சாகத்தில் உள்ளது.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான இலக்குகளை நோக்கி நகர அதிமுக முனைப்பாக உள்ளது.
டிச.6-ம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் நிலையில் உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடக்கவுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் சிறந்த வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தவும், மாநிலம் முழுவதும் தகுதியான நபர்களை நிறுத்தவும் நாளை நடக்கும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

நாளை மாலை சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்தும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x