Published : 05 Dec 2019 03:34 PM
Last Updated : 05 Dec 2019 03:34 PM

பழுதடைந்த நிலையில் உள்ள சசிகலா வீட்டை இடிக்க உத்தரவு

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் பழுதடைந்த நிலையில் உள்ள சசிகலாவின் வீட்டை இடிக்குமாறு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து புதன்கிழமை அறிவிப்பாணையை ஒட்டியது.

தஞ்சாவூர் மகர்நோன்பு சாவடி விஜயமண்டபத் தெரு, மிஷன் சாலையில் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு சொந்தமான வீடு உள்ளது. மொத்தம் 10,500 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த மனையில் வீடும், காலி இடமும் உள்ளன. இந்த வீட்டில் தற்போது ஜெ. மனோகரன் குடியிருந்து வருகிறார்.

இந்நிலையில், இந்த வீட்டுக்குக் கடந்த செப். 17-ம் தேதி மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பாணை வழங்கியது. அதில், "இக்கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில், எந்த நேரத்திலும் இடியும் தருவாயில் உள்ளது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இக்கட்டுமானம் அவ்வழியே செல்பவர்களுக்கும், கட்டிடத்தைப் பயன்படுத்துபவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இக்கட்டிடம் பொதுமக்கள் வந்து செல்லும் இடத்துக்கும், பள்ளிக்கும் அருகில் உள்ளது.

எனவே, இந்த அபாயகரமான கட்டிடத்தை எந்த விதமான உபயோகத்துக்கும் பயன்படுத்துவதைத் தவிர்த்து பொதுமக்களுக்கும், கட்டிடத்தில் வசிப்போருக்கும் ஆபத்து ஏற்படாதவாறு கட்டிடத்தைத் தக்க முன்னேற்புடன் இந்த அறிவிப்பு கிடைத்த 15 நாட்களுக்குள் அப்புறப்படுத்திக் கொள்ளுமாறு கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டப் பிரிவு 327(1)(2)(3), 478-ன்படி அறிவிக்கப்படுகிறது.

தவறும் பட்சத்தில் தங்கள் மீது மாநகராட்சி சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் இச்செயலுக்கான செலவு தொகை அனைத்தும் தங்களிடம் இருந்து வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதுவரை இந்தக் கட்டிடம் இடிக்கப்படவில்லை. எனவே, இந்த வீட்டின் முகப்புப் பகுதியில் மாநகராட்சி அலுவலர்கள் அறிவிப்பாணையை புதன்கிழமை ஒட்டினர். அதில், இக்கட்டிடம் மிகவும் பழுதடைந்து அபாயகரமாக உள்ளதால், இந்த அலுவலக அறிவிப்பின்படி உட்புறம் செல்லுதல் அல்லது பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்ததாவது:

"மாநகரில் பழுதடைந்து இடியும் நிலையில் உள்ள கட்டிடங்கள் குறித்து சில மாதங்களுக்கு முன்பு கணக்கெடுப்பு செய்யப்பட்டது. அப்போது, சிவகங்கை பூங்கா அருகேயுள்ள பழைய கல்வித் துறை அலுவலகக் கட்டிடம் உள்பட 4 கட்டடங்களுக்கு அறிவிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. இதில், இக்கட்டிடமும் ஒன்று. இதன் அடிப்படையில் இந்த அறிவிப்பாணை ஒட்டப்பட்டுள்ளது" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x