Published : 05 Dec 2019 09:35 AM
Last Updated : 05 Dec 2019 09:35 AM

ஹெல்மெட் அணியாதது மட்டுமே உயிரிழப்புகளுக்கு காரணமல்ல: சாலைகளை சீரமைக்க நீதிபதிகள் உத்தரவு 

சென்னை

‘ஹெல்மெட் அணியாதது மட்டுமே விபத்து உயிர்பலி சம்பவங்களுக்கு காரணம் அல்ல’ என கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங் களிலும் சாலைகளை சீரமைக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணி யாததால் ஏற்படும் உயிரிழப்பு களைத் தடுக்கும் வகையில் சட்டவிதிகளை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம் இதுதொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவும், சட்ட விதிகளை அமல்படுத்தவும் அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு, நேற்று நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது தமிழக டிஜிபி சார்பில் உதவி ஐஜி இ.டி.சாம்சன் ஆஜராகி இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்தார்.

அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.எச். அரவிந்த் பாண்டியன் ஆஜராகி வாதிடும்போது, ‘‘ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள்மீது சென்னையைத் தவிர்த்து கடந்த 2018 அக்டோபர் வரை 25 லட்சத்து 50 ஆயிரத்து 170 வழக்குகளும், 2019 அக்டோபர் வரை 47 லட்சத்து 87 ஆயிரத்து 812 வழக்குகளும் தமிழகம் முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதேபோல ஹெல்மெட் அணியாமல் சென்றதால் விபத்து களில் சிக்கி கடந்த 2018-ம் ஆண்டு 4,480 பேரும், 2019-ம் ஆண்டு அக்டோபர் வரை 3,535 பேரும் பலியாகி உள்ளனர்.

மேலும், ஹெல்மெட் அணிந்தும் கடந்த 2018-ம் ஆண்டு 317 பேரும், நடப்பு ஆண்டில் 347 பேரும் இறந்துள்ளனர் என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் டிஜிபி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையைப் பார்க்கும்போது ஹெல்மெட் அணியாதது மட்டுமே விபத்து உயிரிழப்பு சம்பவங்களுக்கு காரணம் அல்ல; மோசமான சாலைகளும் ஒரு காரணம் எனத் தெரிகிறது.

மோட்டார் வாகனச் சட்டம்

ஹெல்மெட் தொடர்பான மோட்டார் வாகனச் சட்டத்தை தமிழக அரசு தீவிரமாக அமல் படுத்தி வருவதால், எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைத்து வருகின்றன. குறிப்பாக அபராதம் மூலமாகவும் அரசுக்கு அதிக வருவாய் கிடைத்து வருவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.

அதேநேரம், குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை செப்பனிடுவதிலும் சீரமைப்பதிலும் சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் உள்ள பிரதான சாலைகளை சீரமைக்கவும் அரசு அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

இதன் தொடக்கமாக சென்னை யில் உள்ள சாலைகளின் தரத்தை மேம்படுத்த அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜன.9-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x