Published : 24 Aug 2015 08:53 AM
Last Updated : 24 Aug 2015 08:53 AM
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கைது செய்யக்கோரி போரூரில் செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்திய அதிமுக பிரமுகர் பேச்சுவார்த்தைக்குப் பின் கீழே இறங்கினார்.
பிரதமர் மோடி- ஜெயலிதா சந்திப்பு குறித்து இளங்கோவன் கருத்து தெரிவித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அதிமுகவினர் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின் றனர்.
வானகரம் அடுத்த சேக்மானியத்தைச் சேர்ந்தவர் குமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் அதிமுக வானகரம் கிளை செயலாளராக இருந்து வருகிறார். இவர், நேற்று அதிகாலை போரூர் ஆற்காடு சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தின் மொட்டை மாடிக்குச் சென்றார். பிறகு, அங்கிருந்த 150 அடி உயர செல்போன் கோபுரத்தில் அதிமுக கொடி மற்றும் பெட்ரோல் கேன், தீப்பெட்டி சகிதம் ஏறினார். இளங் கோவனை கைது செய்யக்கோரி மேலே இருந்து குரல் எழுப்பியபடி இருந்தார்.
இதையறிந்த வளசரவாக்கம், மதுரவாயல் போலீஸார், காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் விருகம்பாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்தனர். கீழே இறங்கும்படி போலீஸாரும் குமாரின் குடும்பத்தினரும் கூறினர். அவர் இறங்க மறுக்கவே தீயணைப்பு நிலைய வீரர்கள் கோபுரத்தில் ஏறினர். இதனால் ஆவேசமடைந்த குமார் வீரர்கள் மீது பெட்ரோலை ஊற்றினார். இதனால் பதற்றம் அடைந்த வீரர்கள் அவசர அவசரமாக கீழே இறங்கினர். மேலும் தன்னை மீட்க யாரும் வந்தால் தீக்குளிப்பேன் என மிரட்டல் விடுத்தார்.
பின்னர், கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதியளித்தை தொடர்ந்து அவர் மேலிருந்து கீழே இறங்கினார். அவரை எச்சரித்த போலீஸார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நில வியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT