Published : 04 Dec 2019 03:51 PM
Last Updated : 04 Dec 2019 03:51 PM

ப.சிதம்பரம் ஃபீனிக்ஸ் பறவையைப் போல வெளியே வருவார்: கே.எஸ்.அழகிரி

ப.சிதம்பரம் ஒரு ஃபீனிக்ஸ் பறவையைப் போல குற்றமற்றவராக வெளியே வருவார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. சிபிஐ விசாரணை முடிந்த நிலையில் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் இன்று (டிச.4) ஜாமீன் வழங்கியது.

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த கே.எஸ்.அழகிரி, "ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. குற்றமற்ற தலைவரைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் சிதம்பரத்தை சிறையில் வைத்திருந்தனர்.

வழக்கில் கபில் சிபில் வாதாடும் போது, "100 நாட்களாக அவரை சிறையில் வைத்திருக்கிறீர்கள். இத்தனை நாட்களில் 10 லட்சம் கேள்விகள் கேட்டிருந்தாலும் அவர் பதில் சொல்லியிருப்பார். ஆனால், ஒரு கேள்வியும் அவரைக் கேட்கவில்லை. விடுதலையும் செய்ய மறுக்கிறீர்கள். இதில் நான் வாதாடி என்ன பயன் இருக்கிறது?" எனக் கேட்டார். நீதிபதியால் அவருக்குப் பதில் சொல்ல முடியவில்லை.

ப.சிதம்பரம் ஒரு ஃபீனிக்ஸ் பறவையைப் போல குற்றமற்றவராக வெளியே வருவார். அவர் மீது தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகள் ஜோடிக்கப்பட்டவை. அவர் நேர்மையானவர். பேராண்மை மிக்கவர். இந்த நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்தவர். பாஜக அவரை அரசியல் காரணங்களுக்காகப் பழிவாங்கி இருக்கிறது. அதிலிருந்து அவர் மீண்டு வருவார்" என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x