Published : 04 Dec 2019 07:14 AM
Last Updated : 04 Dec 2019 07:14 AM

இயல்பைவிட அதிகமாக பெய்த பருவமழை: தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின - தஞ்சை, திருவாரூர், கடலூர், அரியலூர் மாவட்டங்களில் அதிக பாதிப்பு 

சென்னை

தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன என்று கண்டறியப்பட்டு உள்ளது. குறிப்பாக தஞ்சை, திரு வாரூர், கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஆயிரக்கணக் கான ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்யும். இந்த ஆண்டு இயல்பைவிட அதிக மாகப் பெய்தது. தற்போது தீவிரம் அடைந்துள்ள வடகிழக்குப் பருவ மழையும் இயல்பைவிட 13 சதவீதம் அதிகமாகப் பதிவாகியுள்ளது.

இதனால் மேட்டூர் அணை இந்த ஆண்டு 4 தடவை நிரம்பியது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அணை யின் நீர்மட்டம் 120 அடியாகவே நீடித்து வருகிறது.

பெரும்பாலான கால்வாய்கள் தூர்வாரப்பட்டதால், டெல்டா கடை மடைப் பகுதிகளுக்கும் தண்ணீர் போய்ச் சேர்ந்தது. இதனால் சம்பா சாகுபடிப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களில் நெற் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து வேளாண் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடலூர், திரு வாரூர், தஞ்சாவூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பெய்த கன மழையால் ஆயிரக்கணக்கான ஏக் கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள் ளன. மற்ற மாவட்டங்களில் நூற் றுக்கணக்கான ஏக்கரில் நெற் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இதுவரை எடுத்த கணக்கெடுப் பின்படி மாநிலம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வேளாண் துறை சார்பில் வயலில் இருந்து மழைநீரை விரைவாக வடியச் செய்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

வயலில் தேங்கும் நீரை ஆழமான வாய்க்கால்கள் அமைத்து வடித்து விடும்படி விவசாயிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக நாட்கள் நீரின் தேக்கத்தினால் இளம் பயிர்கள் தழை மற்றும் ஜிங்க் சத்துக்கள் குறைபாடு ஏற்பட்டு இளமஞ்சள் அல்லது மஞ்சளாக மாறும். அப்போது, உடனடியாக தண்ணீரை வடியச் செய்து 2 கிலோ யூரியா, 1 கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

பயிர் தண்டு உருளும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் தண்ணீர் தேக்கத்தால் பாதிக்கப்பட்டால் 4 கிலோ டிஏபி-யை 10 லிட்டர் நீரில் முந்தைய நாள் மாலை நேரத்தில் கரைத்து மறுநாள் வடிகட்டி அத்துடன் 2 கிலோ யூரியாவை 190 லிட்டர் நீரில் கலந்து மாலை நேரத்தில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

தண்ணீர் தேக்கத்தால் பயிர் வளர்ச்சி குன்றி காணப்பட்டால் தண்ணீரை வடித்தவுடன் ஏக்கருக்கு 22 கிலோவுடன், ஜிப்சம் 18 கிலோ மற்றும் வேப்பம் புண்ணாக்கு 4 கிலோவை ஒருநாள் இரவு கலந்து வைத்து 17 கிலோ பொட்டாஷ் கலந்து மேலுரமிட வேண்டும். நெற்பயிர் அதிக நாட்கள் நீரில் மூழ்கும்பட்சத்தில் நெல் குருத்து ஈ, இலை சுருட்டுப் புழு, பச்சை தத்துப்பூச்சி, குலைநோய், இலை உரை கருகல் நோய் போன்ற பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்படும் அபாயம் உள்ளது. உடனடியாக அதைக் கண்டறிந்து பூச்சி நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.

இளம் பயிர்களில் தண்ணீர் தேங்கி, அழுகிய நிலை ஏற்பட்டிருப் பின் இருப்பில் உள்ள நாற்றுகளைக் கொண்டு ஊடு நடவு செய்ய வேண்டும் அல்லது அதிக குத்துக் கள் உள்ள நடவு பயிரைக் கலைத்து பயிர் இல்லாத இடங்களில் நடவு செய்ய வேண்டும். தண்ணீர் தேங்கக் கூடிய இடங்களில் தண்ணீர் தேக்கத்தை தாங்கி வளரக் கூடிய ரகங்களான சுவர்ணா சப்1, சிஆர் 1009 சப்1 போன்ற நெல் ரகங்களை நடவு செய்ய என்று விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.

பயிர் சேதத்தை ஈடுசெய்ய பிரதம ரின் பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்யலாம். அரியலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, தஞ்சா வூர், மதுரை, புதுக்கோட்டை, விருது நகர், நாமக்கல், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பயிர் காப் பீடு செய்ய வரும் 15-ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x