Published : 03 Dec 2019 04:26 PM
Last Updated : 03 Dec 2019 04:26 PM

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக டி.எஸ்.அன்பு நியமனம்: தமிழக அரசு உத்தரவு

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக டி.எஸ்.அன்புவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் விடுவிக்கப்பட்ட நிலையில் டி.எஸ்.அன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ஐஜி அந்தஸ்தில் ஆறுமுகம் மட்டுமே இருந்தார். அவரது ஓய்வுக்குப் பின் ஏடிஜிபி அந்தஸ்துக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். பொன்.மாணிக்கவேல் கூடுதல் பொறுப்பாக இருந்துதான் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இன்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ஐஜி அந்தஸ்தில் பொறுப்பு உருவாக்கப்பட்டு சென்னை நிர்வாக ஐஜியாக பதவி வகிக்கும் டி.எஸ்.அன்பு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

இது தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட அந்தஸ்து ஆகும். ஏற்கெனவே சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ஏடிஜிபி அந்தஸ்தில் அபய்குமார் சிங் பதவியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொன்.மாணிக்கவேல் விடுவிப்பும் ஐஜி நியமனமும்:

தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிக்கலான பிரிவாகவே உள்ளது. இதற்கு முன்னர் டிஐஜியாக இருந்த பொன்.மாணிக்கவேல் பின்னர் ஐஜியாகப் பதவி உயர்வு பெற்று ரயில்வே துறைக்கு மாற்றப்பட்டார். பின்னர் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மீண்டும் அவர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக கூடுதல் பொறுப்புடன் நியமிக்கப்பட்டார்.

பின்னர் அவர் நடவடிக்கைகள் மீது காவல்துறை உயர் அதிகாரிகளும், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும் புகார் அளித்தனர். ஒரு கட்டத்தில் அரசுடன் அவர் மோதல் போக்கில் ஈடுபட்டார். உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஓய்வு பெற்ற தினத்தில் மீண்டும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியின் பதவிக்காலம் முடிந்தவுடன் அவரை விடுவித்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசு ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவிட்டது. நீதிமன்றம் மூலம் நியமிக்கப்பட்ட தாம் நீதிமன்ற உத்தரவில்லாமல் ஒப்படைக்க முடியாது என பொன்.மாணிக்கவேல் தெரிவிக்க, நேற்று உச்ச நீதிமன்றம் ஆவணங்களை ஒப்படைக்க பொன்.மாணிக்கவேலுவுக்கு உத்தரவிட்டது.

எனினும் பதவி நீட்டிப்பு குறித்து உயர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குக்குத் தடை விதிக்க மறுத்து வழக்கு நடக்கட்டும் எனத் தெரிவித்துவிட்டது. ஒருவேளை பொன்.மாணிக்கவேலைத் தொடர உத்தரவிட வாய்ப்பிருக்கும் பட்சத்தில் ஐஜி அந்தஸ்தில் அதிகாரியை நியமித்துவிட்டால் அதை வைத்து வாதடலாம் என ஐஜி நியமனம் நடந்திருக்கலாம் என காவல் துறை வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x