Published : 02 Dec 2019 08:34 PM
Last Updated : 02 Dec 2019 08:34 PM

மருத்துவக் கல்வியில் உள்ள பிரச்சினைகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் டாக்டர்கள் சங்கம்  மனு

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் தலைவர்கள் , இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.சுப்பராயன், எம்.செல்வராஜ் உள்ளிட்டோர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை கடந்த 2 நாட்களுக்கு முன் டெல்லியில் சந்தித்தனர்.

அமைச்சர் ஹர்ஷவர்தனிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவின் விவரம்:

“இந்திய மருத்துவக் கழகத்தை ஒழித்துவிட்டு,தேசிய மருத்துவ ஆணையத்தை (என்எம்சி),தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் -2019 மூலம், இந்திய அரசு கொண்டு வந்துள்ளது. நாட்டின் மிக உச்சமட்ட மருத்துவத் துறை தொடர்பான அமைப்பான, என்எம்சி, நவீன அறிவியல் மருத்துவத்தை வளர்த்தெடுப்பதிலும், அனைவருக்கும் தரமான இலவச சிகிச்சை வழங்குவதிலும், மருத்துவக் கல்வி தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதிலும், நவீன அறிவியல் மருத்துவர்களின் பங்களிப்பைக் குறைத்து விட்டதாகக் கருதுகிறோம்.

# என்எம்சியின் கட்டமைப்பு, ஒரு சுயேச்சையான அமைப்பின், ஜனநாயக ரீதியான செயல்பாட்டை முடக்கிவிட்டது. என்எம்சி, மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவக் கல்வியில் மாநிலங்களின் உரிமைகளைப் பறித்துவிட்டது.

# மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு, மருத்துவ மாணவர்களைச் சேர்க்கும் முறையில் உள்ள உரிமையை மாநிலங்களுக்கே மீண்டும் வழங்கிட வேண்டும்.

# கூட்டாட்சி அமைப்பைக் காத்திடவும், மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் இரண்டு உறுப்பினர்களை என்எம்சிக்கு ,தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை என்எம்சி உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்.

# என்எம்சியின் தலைவர், என்எம்சி வாரியங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை என்எம்சி உறுப்பினர்களே தேர்ந்தெடுக்க வேண்டும். நியமன முறை கூடாது.

# இவற்றை நடைமுறைப் படுத்த என்எம்சி சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவரவேண்டும்.

நெக்ஸ்ட் தேர்வு தொடர்பான கோரிக்கை

நெக்ஸ்ட் தேர்வை பன்னோக்குடன் மத்திய அரசு கொண்டுவர முயல்கிறது. இறுதி ஆண்டு மருத்துவப் படிப்புக்கான தகுதிகாண் தேர்வாகவும், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வாகவும், வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு வரும் மாணவர்களுக்கான தகுதித் தேர்வாகவும் நெக்ஸ்ட் தேர்வை மாற்றிட மத்திய அரசு முயல்கிறது.

இது பல்வேறு குழப்பங்களையும், ஊழலையும், முறைகேடுகளையும் உருவாக்கும். நெக்ஸ்ட் அவசியமில்லை. அனைத்து மருத்துவ மாணவர்களும், இந்திய மருத்துவக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் தான் படிக்கிறார்கள். மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் தேர்வுகளை எழுதி வெற்றி பெற்று, பயிற்சி மருத்துவத்தையும் முடித்த பிறகுதான் ,மருத்துவர்களாகப் பதிவு செய்து கொண்டு,தொழில் செய்கின்றனர்.

இந்நிலையில் இறுதியாண்டு மருத்துவப் படிப்பில் கொண்டு வரப்படும் இந்த நெக்ஸ்ட் தேர்வு அவசியமற்றது எனக் கருதுகிறோம். முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான போட்டித் தேர்வாக இது மாற்றப்படுவதால், மருத்துவர்களின் தரத்தை இது பாதிக்க வாய்ப்புள்ளது.

ஏனெனில், முதலாம் ஆண்டு முதலே, ஒரு முதுநிலை இடத்தைப் பெற வேண்டும் என்ற நோக்குடன் மட்டுமே, இந்த நெக்ஸ்ட் தேர்வுக்காக படிக்கத் தொடங்கி, பயிற்சி மையங்களுக்கும் செல்லத் தொடங்கி, நோயாளிகளைப் பார்ப்பதில் கவனம் செலுத்தவில்லை எனில், மருத்துவ மாணவர்களின் மருத்துவ ரீதியான கிளினிக்கல் அனுபவம், அறிவு, திறமை பாதிக்கப்படும். பரந்து பட்ட வாசிப்பையும், பரந்து பட்ட அறிவை, திறமையை வளர்த்துக் கொள்ளாமல் போய்விடுவர்.

இறுதி ஆண்டு மருத்துவப் படிப்பை, முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வாக மாற்றினால், அது குழப்பங்களை உருவாக்குவதோடு, ஒரு தகுதிகாண் தேர்வின் நோக்கத்தையும், போட்டித் தேர்வுக்கான நோக்கத்தையுமே சிதைத்துவிடும். ஒரு போட்டித் தேர்வு என்பது ' அப்ஜக்ட்டிவ் ' டைப்பாக இருக்க வேண்டும். அது விருப்பம் சார்ந்து மதிப்பீடு செய்யும் ' சப்ஜெக்ட்டிவ் தேர்வு முறையாக இருக்கக் கூடாது.

சிறுவினா,பெருவினா போன்ற எழுத்துத் தேர்வுகளும், கிளினிக்கல் தேர்வும் இதில் இருந்தால், ஆசிரியர்கள் விருப்பம் சார்ந்து மதிப்பீடு செய்யும் முறை இருந்தால் அது பாராபட்சத்திற்கும், முறைகேடுகளுக்குமே வழிவகுக்கும். முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில், மருத்துவக் கல்வியில் உள்ள 20 பாடங்களிலும் இருந்தும் கேள்விகள் இடம் பெற வேண்டும். இறுதி ஆண்டு மருத்துவத் தேர்வு அப்படியல்ல. அதில் இறுதியாண்டு பாடங்கள் மட்டுமே இடம் பெற வேண்டும்.

அத்தேர்வில் கிளினிக்கல் தேர்வு, வாய்மொழித் தேர்வு போன்றவை இடம் பெற வேண்டும். இல்லை எனில், ஒரு மருத்துவ மாணவரின் திறமையை முழுமையாகக் கண்டறிய இயலாது. எனவே, இறுதியாண்டு மருத்துவத் தேர்வை ஒரு போட்டித் தேர்வாக (நெக்ஸ்ட் தேர்வாக) மாற்றக்கூடாது. தற்பொழுது நடைமுறையில் உள்ள முறையே தொடர வேண்டும்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை மருத்துவ இடங்களுக்கு மத்திய அரசும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை மருத்துவ இடங்களுக்கு மாநில அரசும், நுழைவுத் தேர்வை நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்திட வேண்டும்.

நீட் தொடர்பான கோரிக்கை

ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை நீட் தேர்வு நடத்தப்படும். எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைகளும் நீட் மூலம் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான உச்சபட்ச வயது வரம்பையும் நிர்ணயிக்க வேண்டும்.

தேசிய தேர்வு முகமை மூலம் அனைத்து மாவட்டங்களிலும் இலவச நீட் பயிற்சி மையங்களைத் தொடங்கிட வேண்டும். இளநிலை, முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்விலிருந்து விலக்கு பெற விரும்பும் மாநிலங்களுக்கு, நீட்டிலிருந்து விலக்களிக்க, என்எம்சி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்.

மருத்துவக் கல்வியில், மாநிலங்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் மாநிலங்களிடமே வழங்கிட வேண்டுகிறோம். அரசுப் பள்ளி, ஏழை எளிய மாணவர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்படுகிறார்கள். மருத்துவ இடங்களை அவர்களால் பெற முடியவில்லை.

எனவே, அரசுப் பள்ளி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் தனி இட ஒதுக்கீட்டைக் கொண்டுவர வேண்டும். இதற்கு என்எம்சி யில் திருத்தம் கொண்டுவர வேண்டுகிறோம். மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் நடைபெறும் முறைகேட்டைத் தடுத்திட, இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கை வரை, கடைசி இடம் நிரப்பப்படும் வரை, மத்திய மாநில அரசுகள் மட்டுமே தனியார் மற்றும் தனியார் நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழங்களின் இடங்களுக்கு மாணவர் சேர்க்கையை நடத்திட வேண்டும்.

அரசு சாரா தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களை நேரடியாக மாணவர் சேர்க்கையை நடத்திட அனுமதிக்கக் கூடாது. நீட் தேர்வு தரப் பட்டியலை தேசிய அளவிலும் மாநில அளிவிலும் வெளியிட வேண்டும். வெளிப்படைத் தன்மையை கடைப்பிடிக்க வேண்டும். தனியார் கல்லூரிகளில் சேர ரூ 2 லட்சமும், அரசுக் கல்லூரிகளில் சேர ரூ 25 ஆயிரமும் பாதுகாப்புக் கட்டணமாக வசூலிக்கப்படுவதை ரத்து செய்ய வேண்டும்.

இணைப்புப் படிப்புகளை (Bridge courses) கொண்டு வருவதும், சமூக சுகாதாரம் வழங்குபவர்கள் (Community Health Providers) நவீன அறிவியல் மருத்துவம் மூலம் சிகிச்சை வழங்க உரிமம் வழங்குவதும் மருத்துவ சேவையின் தரத்தைப் பாதிக்கும். நவீன அறிவியல் மருத்துவத்தைப் பாதிக்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்.

நாடு முழுவதும் வேலை வாய்ப்பின்றி உள்ள நவீன அறிவியல் மருத்துவர்களை முறையாகப் பயன்படுத்த வேண்டும். அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் அதிகப்படுத்த வேண்டும். பொது சுகாதாரத்துறையை வலுப்படுத்த வேண்டும்.

கிராமப்புறங்களின் மருத்துவர்களின் சேவையை உறுதிப்படுத்தத் தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கிராமப்புற மருத்துவமனைகளின் அடிப்படைக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களின் எண்ணிக்கையை மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகப்படுத்த வேண்டும்.

கிராமப்புறங்களிலும், தொலை தூரங்களிலும், கடினமான பகுதிகளிலும் பணிபுரியும் மருத்துவர்களின் ஊதியத்தையும், படிகளையும் உயர்த்த வேண்டும். அவர்கள் தங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பல் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் மக்களுக்கு சிறந்த சேவை கிடைப்பதுடன், வேலையின்மையும் குறையும்.

அரசு மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். கிராமப்புறங்களிலும், தொலை தூரங்களிலும், கடினமான பகுதிகளிலும் மருத்துவ சேவையை வலுப்படுத்த அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவப் படிப்பிலும், உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளிலும், மத்திய மாநில அரசுகளின் மருத்துவக் கல்லூரிகளில் தனி இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும்.

முப்பது விழுக்காடு ஊக்க மதிப்பெண் வழங்கும் முறை அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் உரிய வாய்ப்புகளை வழங்கவில்லை. குழப்பங்களையே உருவாக்கியுள்ளது. அரசு மருத்துவர்களுக்கு, இடங்களை அது உறுதிப்படுத்தவில்லை. எனவே, இதை ரத்து செய்து விட்டு தனி இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும். இந்த, இட ஒதுக்கீட்டை வழங்கிடவும், கூடுதல் மதிப்பெண் வழங்கிடவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கும் வகையில் என்எம்சியில் திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும்.

மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டை( Domestic) உறுதிப் படுத்த வேண்டும்.

தற்பொழுது முதுநிலை மருத்துவக் கல்வியில் 50 விழுக்காடு இடங்களை அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்கள் வழங்குகின்றன. உயர் சிறப்பு மருத்துவக் கல்வியில் 100 விழுக்காடு இடங்களும் அகில இந்திய அளவிலான திறந்த போட்டிக்குச் சென்று விட்டது. இதனால் மாநில மருத்துவர்களும், மாநில உரிமைகளும் பாதிக்கப்படுகின்றன.

இந்த ஒதுக்கீடுகளை 15 விழுக்காடாக குறைக்க வேண்டும். முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் 85 விழுக்காடு இடங்கள் அந்த அந்த மாநிலத்தவருக்கே வழங்கப்பட வேண்டும். இதில் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கக் கூடாது. போதிய மருத்துவ இடங்கள் இல்லாத மாநிலங்களில் உடனடியாக போதிய மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கிட வேண்டும்.

மத்திய அரசு அதற்கு உதவிட வேண்டும். அனைத்து மாநிலங்களிலும், பெரிய நகரங்களிலும் எய்ம்ஸ் (AIIMS) நிறுவனங்களை மத்திய அரசு தொடங்கிட வேண்டும். அவற்றில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 85 விழுக்காட்டை அந்நிறுவனம் அமைந்துள்ள மாநிலத்தவருக்கே வழங்கிட வேண்டும்.

தனியார் மற்றும் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களில் 100 விழுக்காடு மருத்துவ இடங்களின் கட்டணங்களையும் மத்திய மாநில அரசுகளே நிர்ணயிக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ 8 லட்சத்திற்கும் கீழ் உள்ள மாணவர்களின் கல்விக் கட்டணங்கள் முழுவதையும் மத்திய, மாநில அரசுகளே ஏற்க வேண்டும். கல்விக் கடன்களை வட்டியின்றி வழங்குவதோடு, வேலைக்குச் சென்ற பிறகே கல்விக் கட்டணத்தை திரும்ப வசூலிக்க வேண்டும்.

27% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திடுக!

இளநிலை, முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் பல் மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப் பட்டோருக்கு 2007 ஆம் ஆண்டு முதல் வழங்கியிருக்க வேண்டிய இட ஒதுக்கீடு இதுவரை வழங்கப்படவில்லை.

மத்திய அரசு நிறுவனங்களில் மட்டுமே இந்த ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அகில இந்தியத் தொகுப்பில் 27% இட ஒதுக்கீடு வழங்கப்படாததால், அவர்கள் இழப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே,உடனடியாக, இந்த ஆண்டு முதல் இந்த ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

டிம்,எம்சிஎச் போன்ற உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் இட ஒதுக்கீடு எப்பிரிவினருக்கும் வழங்கப்பட வில்லை. எனவே, அதிலும் உடனடியாக இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். தனியார் நிகர்நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களிலும் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். வரைவு தேசியக் கல்விக் கொள்கை 2019 , நவீன அறிவியல் மருத்துவத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும் வகையில் உள்ளது.

மூட நம்பிக்கைகளையும், போலி மருத்துவத்தையும் திணிப்பதாக உள்ளது. எனவே அதன் பரிந்துரைகளைக் கைவிட வேண்டும். பொது சுகாதாரத்துறையை வலுப்படுத்த மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை உலக நல நிறுவனம் பரிந்துரைத்துள்ளது போல், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 விழுக்காட்டை அரசுகளே ஒதுக்கீடு செய்திட வேண்டும்.

நவீன அறிவியல் மருத்துவத்தில், மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும். மருத்துவ நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் மூலம் , சிறிய மற்றும் நடுத்தர மருத்துவமனைகளையும், மருத்துவ நிறுவனங்களையும் மூடச் செய்யும் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிறுவனங்களைப் பாதுகாத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

நாடு முழுவதும் மருத்துவத் துறை சார்ந்த பிரச்சினைகள், மருத்துவ சேவையில் ஏற்படும் குறைபாடுகள்,தவறுகள் போன்றவற்றிற்குத் தீர்வு காண வட்டார, மாவட்ட , மாநில மற்றும் தேசிய அளவில் மருத்துவ டிரிபியூனல்களை உருவாக்க வேண்டும்.

இதில் நீதிபதிகளும் மருத்துவர்களும் இடம் பெற்றிருக்க வேண்டும். மருத்துவ இழப்பீடு வழங்குவதில் உச்சபட்ச இழப்பீடு அளவையும் நிர்ணயிக்க வேண்டும் ”.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மனுவில்,சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் பா.அருணந்தி ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x