Published : 02 Dec 2019 07:16 PM
Last Updated : 02 Dec 2019 07:16 PM

பருவமழை காலத்தில் எடுக்க வேண்டிய 15 நடவடிக்கைகள்: முதல்வர் பழனிசாமி உத்தரவு

இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கடந்த 29/11 அன்று வெளியிட்ட வானிலை அறிக்கையில், தமிழ்நாட்டில் அடுத்து வரும் சில நாட்களுக்கு கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தது. இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவ்வப்போது அறிவுரை வழங்கி, தகுந்த உத்தரவுகளை வழங்கி வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக முதல்வர் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் பழனிசாமி பருவமழை காலத்தில் கீழ்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தினார்.

15 நடவடிக்கைகள்

* மழைக் காலங்களில் கீழே விழும் மரங்களை உடனே அகற்றத் தேவையான ஆட்கள் மற்றும் மரம் அறுக்கும் இயந்திரங்கள் மற்றும் மழை நீர் தேங்கும் இடங்களில் நீரை வெளியேற்ற மின்மோட்டார்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

* பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புக் குழுக்கள் விரைவில் சென்றடைய ஏதுவாக, தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

* வடகிழக்குப் பருவமழையின் காரணமாக வயிற்றுப் போக்கு மற்றும் தொற்று நோய் ஏதும் பரவாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போதுமான அளவில் ப்ளீச்சிங் பவுடர் (Bleaching powder) மற்றும் தேவையான மருந்துகள் இருப்பில் வைக்க வேண்டும்.

* தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்கவும், போதுமான அளவு மருந்துகள் இருப்பில் வைக்க வேண்டும்.

* மருத்துவமனைகளில் தடையின்றி மின்சாரம் வழங்கும் வகையில், போதிய ஜெனரேட்டர் வசதிகளையும் ஏற்பாடு செய்து வைத்திருக்க வேண்டும்.

* பேரிடர் காலங்களில் பற்றாக்குறையினைத் தவிர்க்கும் பொருட்டு இரண்டு மாத காலத்திற்குத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்கள் நியாய விலைக்கடைகளில் போதுமான அளவில் இருப்பில் வைக்க ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டு, அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி நிலையிலான அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களில் / பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

* வடகிழக்குப் பருவமழை காலத்தில் உயிர் சேதம் மற்றும் பொருட் சேதம் ஏற்படாமல் தவிர்க்க, அனைத்து அரசுத் துறையினைச் சார்ந்த செயலர்களும், துறைத் தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

* அனைத்து நீர்தேக்கங்களும் கண்காணிக்கப்பட்டு வர வேண்டும்.

* மழை நீர் தேங்கி பாதிக்கப்பட்ட இடங்களில் மழை நீர் துரிதமாக வெளியேற்ற வேண்டும்.

* ஆற்றின் கரையோரம் உள்ள மக்களை மேடான இடங்களுக்கு உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும்.

* போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள இடங்களில், உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு போக்குவரத்தினைச் சீரமைக்கவும், உயர் மட்டப் பாலங்கள் தேவைப்படும் இடங்களுக்கு நீண்டகாலப் பேரிடர் தணிப்பு நடவடிக்கையாக உரிய முன்மொழிவுகளை உடனடியாக அனுப்ப வேண்டும்.

* சூறாவளி, வெள்ளம், இடி மற்றும் மின்னல் தொடர்பாக தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வுக் குறும்படங்களைப் பார்வையிட்டு, இந்தக் குறும்படங்களை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் திரையரங்குகள் மற்றும் கேபிள் தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்ப வேண்டும்.

* கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக இடுபொருள் மானியம் வழங்கவும், காப்பீட்டுத் தொகையினைப் பெற்றுத் தரவும், காப்பீட்டுக் காலத்தை நீட்டிப்பு செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

* கடலூர் மாவட்டத்தில் 805 நபர்கள் 4 நிவாரண முகாம்களிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் 38 நபர்கள் 2 நிவாரண முகாம்களிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் 73 நபர்கள் 2 நிவாரண முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் உடனடியாக செய்து கொடுக்க வேண்டும்.

இந்தக் கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x