Published : 02 Dec 2019 01:32 PM
Last Updated : 02 Dec 2019 01:32 PM

மேட்டுப்பாளையத்தில் 18 செ.மீ. மழை; 12 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று (டிச.2) வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:

"தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தற்போது வலுவாக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. பதிவான விவரங்களின் அடிப்படையில் 17 இடங்களில் கனமழையும், 3 இடங்களில் மிக கனமழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 18 செ.மீ. மழையும், குன்னூரில் 13 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும், தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலவுகிறது.

அடுத்து வரும் 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாகவும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மழை பெய்யக்கூடும். மேலும், டிச.3, 4 ஆகிய தேதிகளில், தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும். கனமழையை பொறுத்தவரையில், அடுத்து வரும் 24 மணிநேரத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், கடலூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

டிச.3, 4 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரையில் மன்னார் வளைகுடா, குமரிக்கடல், மாலத்தீவுகள், லட்சத்தீவுகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இந்த பகுதியில் அடுத்து வரும் இரு தினனங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை அக்.1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் பதிவான மழையின் அளவு 40 செ.மீ. இந்த காலகட்டத்தின் இயல்பு அளவு 36 செ.மி. இது இயல்பை விட 11 சதவீதம் அதிகம். சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் மிதமான மழை பெய்யக்கூடும்"

இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x