Published : 02 Dec 2019 12:34 PM
Last Updated : 02 Dec 2019 12:34 PM

மாவட்ட நிர்வாகிகள் நியமனம் முடிந்த பிறகு தமிழக பாஜகவுக்கு டிசம்பர் இறுதிக்குள் புதிய தலைவர்

கோப்புப் படம்

தமிழக பாஜகவுக்கு மாவட்டத் தலைவர்கள் நியமனம் முடிந்து இம்மாத இறுதிக்குள் மாநில தலைவர் நியமனம் நடைபெறும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

பாஜகவில் நிர்வாகிகள் நியமனம் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். இந்த நிர்வாகிகளில் செயல்திறன் மிக்கவர்களுக்கு மேலும் 3 ஆண்டுகளுக்குப் பதவி நீட்டிப்பு வழங்கப்படும். தமிழக பாஜக தலைவராக 2014-ல் தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டு பதவி நீட்டிக்கப்பட்டதால் அவர் 5 ஆண்டுகள் தலைவராக இருந்தார். இந்நிலையில் அவர் கடந்த செப்டம்பரில் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து பாஜக தலைவர் பதவி காலியாக உள்ளது. இதுவரை தற்காலிகத் தலைவரும் நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில் தமிழக பாஜக நிர்வாகிகளின் 3 ஆண்டுகள் பதவிக் காலம் முடிவடைவதால் கிளைத் தலைவர்கள், ஒன்றியத் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள் தேர்வு முடிந்ததும் மாநிலத் தலைவரை நியமிக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.

மாநிலம் முழுவதும் கிளைத் தலைவர்கள் நியமனம் முடிந்துள்ளது. ஒன்றியத் தலைவர்கள் நியமனம் நடந்து வருகிறது. அடுத்து மாவட்டத் தலைவர்கள் நியமனம் நடைபெறும். மாவட்டத் தலைவர்கள் நியமனத்தை டிச.15-க்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய மாநிலத் தலைவர் நியமனம் இந்த மாத இறுதிக்குள் நடைபெறும் எனக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

மாநிலத் தலைவர் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், ஏ.பி.முருகானந்தம், நயினார் நாகேந்திரன், கே.டி.ராகவன், பேராசிரியர் ஸ்ரீனிவாசன் ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.

புதிதாக நியமிக்கப்படும் தலைவர் தலைமையில்தான் தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டப் பேரவைத் தேர்தலை கட்சி சந்திக்க வேண்டி உள்ளது. இந்நிலையில், தலைவர் பதவியைப் பிடிக்க பாஜக முக்கிய நிர்வாகிகளிடம் கடும் போட்டி நிலவுகிறது.

இது குறித்து மதுரை புறநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் கூறுகையில், பாஜக நிர்வாகிகள் தேர்தல் நடந்து வருகிறது. கட்சியில் ஆர்வமாக உள்ளோருக்குப் பதவிகள் வழங்கப்படுகின்றன. கிளைத் தலைவர்கள், ஒன்றியத் தலைவர்கள் நியமனம் முடிந்து பொறுப்பேற்று வருகின்றனர். புதிய நியமனத்தில் ஏற்கெனவே பதவியில் இருப்போருக்கு அவர்களின் செயல்திறன் அடிப்படையில் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது, என்றார்.

- கி.மகாராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x