Published : 01 Dec 2019 08:37 PM
Last Updated : 01 Dec 2019 08:37 PM

சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கட்கிழமை மழை விடுமுறை

சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 16-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. கடந்த சில நாட்களாக கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், டெல்டா மாவட்டங்கள், மதுரை மற்றும் புறநகர் பகுதிகளிலும் நேற்று விடிய, விடிய மழை பெய்தது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்துக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ விடப்பட்டது.

மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணிநேரத்துக்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கனமழை தொடர்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக ஆட்சியர் சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.

முன்னதாக, விடுமுறை இல்லை என்று அறிவிக்கப்பட்டது. பிறகு, விடுமுறை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் சீதாலட்சுமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளை ஈடு செய்யும் பணி நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

மற்ற மாவட்டங்களில் விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை விடப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கும், கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x