Published : 01 Dec 2019 01:03 PM
Last Updated : 01 Dec 2019 01:03 PM

அதி கனமழை, மிக கனமழை பெய்யும் மாவட்டங்கள்? - வானிலை ஆய்வு மையம் விளக்கம் 

சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணிநேரத்துக்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை, புறநகர் பகுதியில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும். சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 14 இடங்களில் மிக கனமழையும் 53 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் 19 செ.மீ. மழை, கடலூரில் 17 செ.மீ. மழை, நெல்லையில் 15 செ.மீ. மழை, காஞ்சிபுரத்தில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

லட்சத்தீவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சூறாவளிக் காற்று வீச வாய்ப்பு உள்ளதால் இன்று லட்சத்தீவு, குமரிக்கடல், மாலத்தீவு பகுதிகளுக்கும் நாளை லட்சத்தீவு பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அக்டோபர் 1 முதல் இன்று வரை தமிழகத்தில் 39 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 3 செ.மீ. அதிகம். சென்னையில் 60 செ.மீ. பெய்ய வேண்டிய மழை 51 செ.மீ. அளவில் மட்டும் பெய்துள்ளது. இது இயல்பை விட 9 செ.மீ. குறைவு''.

இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x