Published : 30 Nov 2019 11:10 AM
Last Updated : 30 Nov 2019 11:10 AM
ஏழைகளுக்கும் காய்கறிகள், பழங்கள் எளிதாகவும், விலை குறைவாகவும் கிடைக்க ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் கூடுதலாக 10 ஹெக்டேரில் காய்கறியும், 2 ஹெக்டேரில் பழங்களும் சாகுபடி செய்ய இந்த ஆண்டு முதல் தோட்டக்கலைத் துறைக்கு தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஒவ்வொருவரும் ஆரோக்கிய மாக வாழ 300 கிராம் காய்கறிகள், 100 கிராம் பழங்கள் வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை மக்கள் தொகைக்கு ஏற்ப காய்கறி, பழங்கள் உற்பத்தி இல்லை. பற்றாக்குறையால் விலை அதிகமாகி ஏழைகளால் காய்கறிகள், பழங்களை வாங்கிச் சாப்பிட முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனால், குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் சத்துக் குறைபாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக மதுரை அரசு மருத்துவ மனையில் ஆண்டுதோறும் 6 ஆயிரம் பிரசவம் நடந்தால் அதில் 2 ஆயிரம் பிரசவங்கள் குறைமாதப் பிரசவமாக நடக்கிறது.
அதனால், தோட்டக்கலைத் துறை மூலம் ஒவ்வொரு வருவாய் கிராமத்துக்கும் 12 ஹெக்டேரில் காய்கறிகள், பழங்கள் சாகு படியை அதிகரிக்க இலக்கு நிர்ண யித்து அதை இந்த ஆண்டுமுதலே செய்ய அனைத்து மாவட்ட ஆட்சி யர்களுக்கும் அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இது குறித்து மதுரை மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பூபதி கூறியதாவது: தமிழகத்தில் தற்போது காய்கறிகள் 2 லட்சத்து 20 ஹெக்டேரிலும், பழங்கள் 2,84,000 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்படுகிறது. மக்கள் அனைவருக்கும் காய்றிகள், பழங்கள் கிடைக்க தற்போதுள்ள சாகுபடி பரப்பு போதுமானது இல்லை. அதனால், சாகுபடிப் பரப்பை அதிகரிக்க சிறப்பு அபிவிரு த்தித் திட்டம் தொடங்கப்படுகிறது.
அதன்படி ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் இருக்கும் காய்கறி, பழங்கள் சாகுபடி பரப்புடன் கூடுதலாக 12 ஹெக்டேர் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் தமிழகத்தில் பழங்கள் சாகுபடி பரப்பை 3,20,000 ஹெக்டேராகவும், காய்கறிகள் பரப்பை 3,95,000 ஹெக்டேராகவும் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் 2,690 ஹெக்டேரில் காய்றிகள் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால், 667 வருவாய் கிராமங்கள் உள்ளன. இந்த புதிய திட்டத்தில் மாவட்டத்துக்குக் கூடுதலாக 6,670 ஹெக்டேர் காய்கறி சாகுபடி பரப்பு தேவைப்படுகிறது. பழங்களைப் பொருத்தவரை மதுரையில் 11,422 ஹெக்டேர் பரப்பு உள்ளது. வருவாய் கிராமங்கள் அடிப்படையில் கூடுதலாக 1,392 ஹெக்டேர் தேவைப்படுகிறது.
தோட்டக்கலைத் துறைத் மூலமாகவே சாகுபடி பரப்பை அதிகரிக்க வேண்டும் என்பதி ல்லை. விவசாயிகளுக்கு வேண்டிய உதவிகள் வழங்க சிறப்புத் திட்டங்கள் மூலமும் நிதியுதவி அளிக்க தமிழகஅரசு அனுமதித் துள்ளது, என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT