கடையநல்லூர் அருகே குளத்தை ஆக்கிரமித்து விவசாயம்: 11 ஏக்கர் நிலம் மீட்பு

கடையநல்லூர் அருகே குளத்தை ஆக்கிரமித்து விவசாயம்: 11 ஏக்கர் நிலம் மீட்பு
Updated on
1 min read

கடையநல்லூர் அருகே குளத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்த 11 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பால அருணாசலபுரம் கிராமத்தில் சுமார் 11 ஏக்கர் பரப்பளவில் பால்வண்ணப்பேரி குளம் இருந்தது.

மானாவாரி குளமான இப்பகுதியில் தொகுப்பு மரக்கன்றுகள் நடுதல், பண்ணைக் குட்டை அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள ஊராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது.

இந்தப் பணிகளை மேற்கொள்ள கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகாரிகள் ஆய்வு செய்ய சென்றபோது, அங்கு 18 பேர் குளத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தது தெரியவந்தது.

மரக்கன்றுகள் நடுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில், நேற்று மாலையில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கடையநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சிக்கந்தர் பீவி மற்றும் அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நிலத்தை அளவீடு செய்து, எல்லைக் கற்கள் நட்டு, குளத்தை மீட்டனர். அப்போது விவசாயிகள் யாரும் அங்கு வராததால், பணிகள் இடையூறின்றி முடிந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in