Last Updated : 29 Nov, 2019 12:47 PM

 

Published : 29 Nov 2019 12:47 PM
Last Updated : 29 Nov 2019 12:47 PM

குற்ற வழக்குகளில் சாட்சிகள் வாக்குமூலத்தை ஆடியோ, வீடியோவில் பதிவு செய்க: பிறழ்சாட்சிகளைத் தடுக்க  உயர் நீதிமன்றம் அதிரடி

தமிழகத்தில் அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் குற்ற வழக்குகளில் சாட்சிகள் வாக்குமூலத்தை ஆடியோ அல்லது வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

குற்ற வழக்குகளில் சாட்சிகள் பிறழ்சாட்சியாக மாறுவதால் குற்றவாளிகள் விடுதலையாவைத் தடுக்க சாட்சிகளின் வாக்குமூலத்தை ஆடியோ, வீடியோவில் பதிவு செய்ய உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு ஆலோசனை தெரிவித்தது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், பிறழ்சாட்சியால் குற்றவாளிகள் விடுதலையாவதை அனுமதித்தால் குற்றவியல் நீதிமுறையின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை குறைந்துவிடும். சாட்சிகள் வாக்குமூலத்தை ஆடியோ அல்லது வீடியோபதிவு செய்யலாம் என குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்தச் சட்டம் 2009-ல் நடைமுறைக்கு வந்தபோதும் கடந்த 10 ஆண்டுகளாக சாட்சிகள் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.

வாக்குமூலத்தை ஆடியோ, வீடியோவில் பதிவு செய்யும்போது அந்த சாட்சிகள் பிறழ்சாட்சியாக மாறுவதற்கு பலமுறை யோசித்து செயல்படுவர்.

எனவே எதிர்காலத்தில் அனைத்து வழக்குகளிலும் சாட்சிகளின் வாக்குமூலத்தை ஆடியோ அல்லது வீடியோவில் பதிவு செய்யும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் பலரிடம் நீதிபதிகள் கருத்து கேட்டனர். காவல்துறை உயர் அதிகாரிகளும் நேரில் ஆஜராகி வாக்குமூலத்தை ஆடியோ, வீடியோவில் பதிவு செய்வதால் ஏற்படும் சாதக, பாதகங்களைத் தெரிவித்தனர். பின்னர் நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கில் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவு பிறப்பித்தது.

அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

குற்ற வழக்குகளில் சாட்சிகள் பிறழ்சாட்சியாக மாறாமல் இருக்க குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் மாவட்ட நீதிமன்றம், மகிளா நீதிமன்றம் மற்றும் கீழ் நீதிமன்றங்களில் முக்கிய வழக்குகளில் சாட்சிகள் வாக்குமூலத்தை ஆடியோ, வீடியோ பதிவு செய்ய வேண்டும்.

குறிப்பாக 10 ஆண்டுகள் அதற்கு மேல் தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளில் சாட்சிகள் வாக்குமூலத்தை கட்டாயம் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்.

சாட்சிகளின் வாக்குமூலத்தை ஆடியோ/ வீடியோவில் பதிவு செய்வது தொடர்பாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்துள்ள உத்தரவுகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும்.

நீதிமன்றங்களில் சாட்சிகளின் வாக்குமூலத்தை ஆடியோ, வீடியோவில் பதிவு செய்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு 3 மாதத்துக்குள் செய்து தர வேண்டும்.

சாட்சிகள் பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். இது தொடர்பாக ஏப். 1-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x