

மத்திய அரசின் மலிவு விலை மருந்தகங்களில், ஒரு ரூபாய்க்கு சானிடரி நாப்கின்கள் விற்பனை தொடங்கியுள்ளது.
மக்களுக்கு குறைவான விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு, நாடு முழுவதும் ‘மக்கள் நல மருந்தகங்கள்’ எனும் மலிவு விலை மருந்தகங்களை மத்திய அரசு திறந்து வருகிறது. இந்த மருந்தகங்களில் கிடைக்கும் 800-க்கும் மேற்பட்ட மருந்துகள், பிரபல நிறுவனங்களின் விலையைவிட 50 முதல் 90 சதவீதம் வரை குறைவாக இருக்கின்றன. தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் செயல்படுகின்றன.
கோவையில் 56, திருப்பூரில் 13, நீலகிரியில் 8 ‘மக்கள் நல மருந்தகங்கள்’ செயல்படுகின்றன. இங்கு, தற்போது ஒரு ரூபாய்க்கு சானிடரி நாப்கின் விற்பனை செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக மக்கள் நல மருந்தக உரிமையாளர்கள் கூறும்போது, ‘மக்கள் நல மருந்தகங்களில் மிக குறைந்த விலையில் சானிடரி நாப்கின் விற்க முடிவு செய்யப்பட்டு, நான்கு நாப்கின்கள் அடங்கிய பாக்கெட் ரூ.10-க்கு விற்கப்பட்டு வந்தது. ஒரு நாப்கின் ரூ.2.50-க்கு கிடைத்து வந்த நிலையில், ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் என கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, 4 நாப்கின் கொண்ட பாக்கெட், ரூ.4-க்கு விற்கப்படுகிறது. இந்த நாப்கின், தற்போது ஒரு சில கடைகளுக்கு வந்துள்ளது. வரும் நாட்களில் அனைத்து மக்கள் நல மருந்தகங்களிலும் ரூ.1-க்கு கிடைக்கும்.
இதுதவிர, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், வயிற்று கோளாறுகள், காசநோய், இருதய நோய் உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகளும் கிடைக்கின்றன.
தங்களுக்கு அருகே உள்ள மக்கள் நல மருந்தகத்தின் முகவரி, தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை http://janaushadhi.gov.in/StoreDetails.aspx என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்' என்றனர்.