கிழக்கு கடற்கரை சாலையில் விதிமீறல் கட்டிடங்கள்: சிஎம்டிஏ, சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் அபராதம்

கிழக்கு கடற்கரை சாலையில் விதிமீறல் கட்டிடங்கள்: சிஎம்டிஏ, சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் அபராதம்
Updated on
1 min read

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விதிமீறல் கட்டிடங்கள் வழக்கில் முறையாக ஒத்துழைப்பு வழங்காத சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு (சிஎம்டிஏ) தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் விதிகளை மீறி கட்டியுள்ள சொகுசு பங்களாக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்குகள் இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது முட்டுக்காட்டில் விதியை மீறி கட்டப்பட்டுள்ள ஒரு தனியார் சொகுசு பங்களாவின் மின்சாரம், தண்ணீர் இணைப்புகளைத் துண்டிக்க உத்தரவிட்டனர்.

அதேபோல, உத்தண்டி கடற்கரை பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 700-க்கும் மேற்பட்ட வீடுகள் விதிகளை மீறி கட்டப்பட்டிருப்பதாகவும், ஆய்விற்குப் பின்னரும் 18 வீடுகள் விதிகளை மீறி கட்டியிருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, இந்த வழக்கில் அரசுத் தரப்பினர் எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், வீட்டு வசதி வாரிய செயலாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை டிசம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in