Published : 28 Nov 2019 02:23 PM
Last Updated : 28 Nov 2019 02:23 PM

உள்ளாட்சித் தேர்தல்: அனைத்துக் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை

மாநில தேர்தல் ஆணையம் அலுவலகம்

சென்னை

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, அனைத்துக் கட்சிகளுக்கு இடையேயான ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.

உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகளில் மாநிலத் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. வாக்குச்சாவடிகளும் வாக்குப்பதிவு இயந்திரங்களும் தயாராக உள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கிடையே ஆலோசனைக் கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது.

அதன்படி, இன்று (நவ.28) காலை 11 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக, திமுக, தேமுதிக உள்ளிட்ட மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகளும், பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் ஆகிய தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், வாக்குப்பதிவு இயந்திரத்துடன் கூடிய விவிபாட் மூலம் தேர்தல் நடத்த வேண்டும், மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர்களை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையைக் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் சில கட்சிகளின் பிரதிநிதிகள் சார்பில் முன்வைக்கப்பட்டன.

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத் தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x