Published : 28 Nov 2019 01:37 PM
Last Updated : 28 Nov 2019 01:37 PM

மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிவாளரின் கால நீட்டிப்புக்கு எதிர்ப்பு

மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பதிவாளராகப் பொறுப்பு வகிக்கும் ஆர். சுதாவின் கால நீட்டிப்புக்கு அலுவலர்கள், பேராசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பதிவாளராக பணிபுரிந்த சின்னையா சில மாதங்களுக்கு முன் பணி ஓய்வு பெற்றார். அவருக்குப் பதிலாக நிரந்தரப் பதிவாளரை நியமிக்கும் வரை அதே பல்கலைக்கழக பிரெஞ்ச் துறை பேராசிரியர் ஆர். சுதா பொறுப்பு பதிவாளராக நியமிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து நிரந்தரப் பதிவாளர் நியமனத்துக்கான அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. தகுதியான நபர்கள் பலர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கான தகுதிப் பட்டியலை தயாரித்து நேர்காணல் நடத்த இருமுறை தேதி நிர்ணயிக்கப் பட்டது. ஆனாலும், நிர்வாகக் காரணங்களால் நேர்காணல் இது வரை நடக்கவில்லை.

இந்நிலையில் பல்கலைக்கழகப் பதிவாளர் பதவிக்கான ஓய்வு வயதை எட்டிய நிலையிலும், பேராசிரியர் ஆர். சுதா தொடர்ந்து அந்த பொறுப்பிலேயே நீடிப் பதற்கு சிண்டிகேட் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஏற்கெனவே அப்பொறுப்பில் இருந்த சின்னையா 58 வயதில் பணி ஓய்வுபெற்றார். ஆனால், சுதாவுக்கு ஏன் ஓய்வு அளிக்கவில்லை என பேராசிரியர்கள், அலுவலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதற்கிடையே தற்போது நிர்வாகத்தில் பணியில் உள்ள வேறு ஒருவரை பொறுப்பு பதிவாளராக கொண்டு வர முயற்சி நடப்பதாகவும் கூறப்படுகிறது. பல்கலைக் கழக நிர்வாக அலுவலர் சங்கம், கடந்த 22-ம் தேதி துணை வேந்தர் எம். கிருஷ்ணன், உயர் கல்வித் துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில், ‘‘58 வயதை கடந்த பொறுப்பு பதிவாளர் சுதாவுக்கு பணி ஓய்வு அளிக்கவேண்டும். அவருக்கு கால நீட்டிப்பு வழங்கக் கூடாது. இந்நடவடிக்கை பல்கலைக்கழக விதிகளுக்கு முரணானது’’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக, பல்கலை. அலுவலர் சங்கத்தினர் கூறியது:

பதிவாளர் பதவியில் இருப்பவர்கள் 58 வயது வரைதான் இருக்கலாம். ஆனால், சுதாவுக்கு நவ.23-ம் தேதி முதல் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற் கிடையில் நிரந்தரப் பதிவாளரை நியமிக்கும் நடவடிக்கையும் தொடர்ந்து தாமதமாகிறது. அதற் கான பட்டியல் தயாரித்தும், நேர் காணல் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நேர்காணல் குழுவில் அரசு சார்பிலான பிரதிநிதி ஒருவர் இடம் பெறவேண்டும். ஆனால் அதற்கான முயற்சியை மேற்கொள்ளவில்லை. இந்த விஷயத்தில் ஒரு சிலரது கருத்துகளுக்கு பிற சிண்டிகேட் உறுப்பினர்கள் ஒத்துழைப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும். ஆகவே, நிரந் தரப் பதிவாளரை நியமிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். நிரந்தரப் பதிவாளர் இன்றி, பல்கலை.யில் புதிய நியமன அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

பல் கலை. துணைவேந்தர், உயர் கல்வித் துறை செயலர் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.
இதுகுறித்து பதிவாளர் (பொறுப்பு) சுதாவிடம் கேட்ட போது, ‘‘58 வயதுக்குப் பின் இப்பதவியில் இருக்க முடியாது என எனக்கும் தெரியும்.

பல்கலை.நிர்வாகத்திடம் இதுகுறித்து தெரிவித்தேன். நிரந்தரப் பதி வாளரை நியமிக்கும் வரை பொறுப்பில் இருக்குமாறு அறிவுறுத்தினர். கடந்த முறை நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பதிவாளர் பணியில் இருக்கிறேன். புதிய பதிவாளரை நியமித்தவுடன் எனது துறை பொறுப்புக்கு சென்றுவிடுவேன். அங்கு 60 வயது வரை பணியில் இருப்பது எனது விருப்பம்,’’ என்றார்.

- என். சன்னாசி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x