Published : 28 Nov 2019 11:32 AM
Last Updated : 28 Nov 2019 11:32 AM

கோவை இரட்டைக் கொலை வழக்கு: குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை; உயர் நீதிமன்றம் உத்தரவு

கோவையில் சிறுவன், சிறுமியைக் கடத்தி கொலை செய்த வழக்கில் மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு கோவையில் முஸ்கான் என்ற 10 வயது சிறுமியும் ரித்திக் என்ற 7 வயது சிறுவனும் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டனர். அவர்களது உடல்கள் பொள்ளாச்சி அருகே கண்டெடுக்கப்பட்டன. விசாரணையில், சிறுமி முஸ்கான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதும் சிறுவன் ரித்திக் உடல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது.

பள்ளி வாகன முன்னாள் ஓட்டுநர் மோகன்ராஜ் எனும் மோகனகிருஷ்ணன் என்பவரும், அவரது நண்பர் மனோகரனும் கைது செய்யப்பட்டனர். முதலில் பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்ட அவர்கள் முடிவு செய்ததாகவும் பின்னர் அச்சத்தின் காரணமாக அவர்களைக் கொலை செய்ததாகவும் அப்போது காவல்துறை தெரிவித்தது.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இருவரையும் குற்றம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்றபோது நவம்பர் 9, 2010 அன்று, காவலர் ஒருவரின் துப்பாக்கியைப் பிடுங்கி வண்டியை நிறுத்துமாறு மோகன்ராஜ் மிரட்டினார் என்றும், அப்போது என்கவுன்ட்டர் செய்து கொல்லப்பட்டார் என்றும் காவல் அதிகாரிகள் கூறினர்.

பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் மனோகரனுக்கு கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம், தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், நவம்பர் 7 ஆம் தேதி உச்ச நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து, மனோகரனை டிசம்பர் 2 ஆம் தேதி தூக்கிலிடும்படி, கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் நவம்பர் 18 ஆம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மனோகரன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆளுநருக்கு கருணை மனு அனுப்ப 6 வாரம் அவகாசம் கேட்டு தமிழக அரசிடமும், சிறைத்துறையிடமும் கொடுத்த மனு மீது அவகாசம் வழங்காமல், தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மனோகரன் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை இன்று (நவ.28) விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டீக்காராமன் அமர்வு, மனோகரனைத் தூக்கிலிடும்படி கோவை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மனோகரன் மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x