

ஜெயலலிதாவின் மூன்றாமாண்டு நினைவு தினத்தன்று சென்னையில் அமமுக சார்பில் மவுன ஊர்வலம் நடத்தப்படும் என, அக்கட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமமுக தலைமைக் கழகம் இன்று )நவ.28) வெளியிட்ட அறிவிப்பில், "மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு மறைந்த மூன்றாமாண்டு நினைவு தினம் வருகின்ற டிசம்பர் 5 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது.
அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு சென்னை, அண்ணா சிலை அருகில் இருந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் மவுன ஊர்வலமாக புறப்பட்டு, ஜெயலலிதா துயில் கொள்ளும் மெரினா கடற்கரை நினைவிடத்தில் ஒன்று கூடி இதய அஞ்சலி செலுத்தி, ஜெயலலிதா காலத்துப் பெருமைகள் அனைத்தையும் மீட்டெடுத்திட சபதம் ஏற்போம்.
இந்நிகழ்வில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, ஊராட்சி, கிளைக் கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.