

பெரியாறு பாசன நீர் திறப்பில் சிவகங்கை மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால், மேலூர் பொதுப்பணித்துறை கோட்டத்தில் இருந்து சிவகங்கையை தனியாக பிரித்து தனி கோட்டம் உருவாக்கும் கோரிக்கை வலுத்து வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் ஷீல்டு, லெசிஸ், 48 வது மடை கால்வாய், கட்டாணிப்பட்டி-1 மற்றும் 2 ஆகிய 5 நேரடி பெரியாறு பாசன கால்வாய்கள் மூலம் 136 கண்மாய்களுக்குட்பட்ட 6,748 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.
அதேபோல் மாணிக்கம் கால்வாய், சிங்கம்புணரி கால்வாய், மறவமங்கலம் உள்ளிட்ட விஸ்தரிப்பு மற்றும் நீட்டிப்பு கால்வாய்கள் மூலம் 332 கண்மாய்களுக்குட்பட்ட 8 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.
வைகை அணையில் இருந்து அக்.8-ம் தேதி முதல்போக சாகுபடிக்கு பெரியாறு பாசன கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
ஆனால் அறிவித்தப்படி சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இதையடுத்து நேற்று சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
மேலும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரியாறு பாசன கால்வாய்கள் முழுவதும் பொதுப்பணித்துறை மேலூர் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதனால் ஒவ்வொரு முறையும் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும் பெரியாறு பாசன கால்வாய்களும் பராமரிப்பின்றி பல இடங்களில் சேதமடைந்துள்ளன.
இதனால் தண்ணீர் திறந்தாலும் கண்மாய்களுக்கு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. 12 ஆயிரம் முதல் 14 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் இருந்தாலே தனி கோட்டம் உருவாக்க முடியும். சிவகங்கை மாவட்ட பெரியாறு கால்வாய்கள் மூலம் 14 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகின்றன.
இதனால் மேலூர் பொதுப்பணித்துறை கோட்டத்தில் இருந்து சிவகங்கை மாவட்டத்தை தனியாக பிரித்து தனி கோட்டம் உருவாக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர், துணை முதல்வர், சிவகங்கை, தேனி, மதுரை மாவட்ட ஆட்சியர்கள், பெரியாறு வடிநில கோட்டத்தின் தலைமை பொறியாளரை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து பெரியாறுபாசன விவசாயிகள் கூறியதாவது: தற்போது சிவகங்கை மாவட்ட கால்வாய்கள் அனைத்தும் மதுரை மாவட்ட அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் அந்த மாவட்ட அமைச்சர்கள், விவசாயிகள் கூறுவதையே அதிகாரிகள் கேட்கின்றனர்.
சிவகங்கை மாவட்டத்திற்கு உரிமை இருந்தும் தண்ணீர் திறக்க மறுக்கின்றனர். இதனால் சிவகங்கை மாவட்டத்திற்கென தனி கோட்டம் உருவாக்க வலியுறுத்துவது என முடிவு செய்துள்ளோம், என்று கூறினர்.