தமிழக கடல் எல்லைக்குள் பிற மாநில இயந்திர படகுகளை அனுமதிக்க தடை கோரி வழக்கு: குமரி ஆட்சியர், எஸ்பி பதிலளிக்க உத்தரவு

தமிழக கடல் எல்லைக்குள் பிற மாநில இயந்திர படகுகளை அனுமதிக்க தடை கோரி வழக்கு: குமரி ஆட்சியர், எஸ்பி பதிலளிக்க உத்தரவு
Updated on
1 min read

தமிழக கடல் எல்லைக்குள் பிற மாநில இயந்திரப் படகுகளை அனுமதிக்க தடை கோரிய வழக்கில் குமரி ஆட்சியர், எஸ்பி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குமரி மாவட்ட மீன் வியாபாரிகள் சங்கத் தலைவர் அந்தோணி பிச்சை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தால் நீரோடி, மார்த்தாண்டம், வள்ளவிளை உள்பட 15 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தால் பலர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

மீனவர்கள் மோட்டார் பொருத்திய நாட்டுப்படகுகள், மோட்டார் பொருத்தப்படாத நாட்டுப்படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்கின்றனர். இவர்கள் கடல் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் மீன்குஞ்சுகளை, மீன் முட்டைகளை பிடிப்பதில்லை.

இந்நிலையில் தற்போது பிற மாநிலங்களை சேர்ந்த இயந்திர படகுகள் மூலம் மீன்களுடன் மீன் குஞ்சுகளும் பிடிக்கப்படுகின்றன. இந்த படகுகளில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையை பயன்படுத்தி ஆழ்கடலில் மீன்பிடிக்கின்றனர்.

இதனால் கடலில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.

மாநில கடல் எல்லைகளைத் தாண்டும் போது, அந்தந்த மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு தமிழக அரசிடம் அனுமதி பெறாமல் பிற மாநில இயந்திரப் படகுகள் தேங்காய்பட்டினம் துறைமுகப்பகுதியில் மீன்பிடி தொழில் செய்கின்றன.

எனவே பிற மாநில இயந்திரப் படகுகளை தமிழக கடல் எல்லையில் மீன்பிடிக்க அனுமதி வழங்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி அமர்வில் இன்று (நவ.27) விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக குமரி மாவட்ட ஆட்சியர், குமரி மாவட்ட எஸ்பி மற்றும் மீன்வளத்துறை இணை இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை டிச. 12-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in