

உணவு கலப்படம் தொடர்பாக ஊடகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த துரைப்பாண்டி உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "மதுரை மாவட்டத்தில் உணவுத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் கலப்பட எண்ணெய் விற்பனை கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால் இதுவரை விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை.
சமையல் எண்ணெயில் மட்டுமல்லாமல் பெரும்பாலான உணவுப் பொருட்களில் கலப்படம் செய்யப்படுகிறது. இதனால் மக்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான நோய்கள், குழந்தையின்மை, உடல் பருமன் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இறப்பு விகிதம் அதிகரிக்க உணவுப் பொருள் கலப்படம் முக்கியக் காரணமாக இருக்கிறது.
லாபத்தை மட்டும் கருததில் கொண்டு கலப்பட உணவுப் பொருட்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. இது தொடர்பாக ஊடகங்கள் வழியாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
எனவே உணவுக் கலப்படம் தொடர்பாக ஊடகங்கள் வழியாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்"
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி அமர்வு தள்ளுபடி செய்து இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டது.