Published : 27 Nov 2019 11:13 AM
Last Updated : 27 Nov 2019 11:13 AM

சமயபுரத்தில் புதிய சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டும் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் ‘யு டர்ன்’ செய்யும் வாகனங்கள்

சமயபுரத்தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஆபத்தான முறையில் குறுக்கே கடக்கும் வாகனங்கள்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் செல்ல வசதியாக புதிதாக சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டும், அதை பயன்படுத்தாமல் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையிலே ‘யு டர்ன்’ செய்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ளது சமயபுரம் மாரியம்மன் கோயில். இக்கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு ஊர்களிலிருந்து வந்து செல்கின்றனர். இவர்கள் அரசுப் பேருந்துகள் மட்டுமன்றி, தனியார் பேருந்துகள், வேன்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் இங்கு வருகின்றனர். குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை களிலும், விழாக்காலங்களிலும் பக்தர்களின் எண்ணிக்கை அதி கமாக இருக்கும்.

சென்னை வழித்தடத்திலிருந்து வரும் வாகனங்கள், சமயபுரத் துக்குள் செல்லவும், மீண்டும் வெளியேறவும் தேசிய நெடுஞ் சாலையின் குறுக்காகச் சென்று கொண்டிருந்தன. இதனால், நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்களும், குறுக்காகச் செல்லும் வாகனங்களும் அடிக்கடி மோதி விபத்துகள் ஏற்பட்டு வந்தன.

இதையடுத்து, சமயபுரத்துக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் செல்வதற்காக தேசிய நெடுஞ் சாலைகள் ஆணையம் ரூ.12.77 கோடி செலவில் 1.59 கிலோ மீட்டர் நீளத்துக்கு சென்னை- திருச்சி வழித்தடத்தின் இடது புறத்தில் புதிதாக சர்வீஸ் சாலையை அமைத்துள்ளது. இந்த சாலையை கோயிலுக்கு வருவோர் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். இதனால், சென்னை வழித்தடத்திலிருந்து வரும் வாகனங்கள் இந்த சர்வீஸ் சாலையைப் பயன்படுத்தி நேராக சமயபுரம் கோயிலுக்குச் செல்லலாம். ஆனால், நகரப் பேருந்து கள் உள்ளிட்ட சில வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தாமல், மீண்டும் பழையபடி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்காகவே கடந்து செல்கின்றன.

இதுகுறித்து மாவட்ட சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் எம்.சேகரன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: இந்த பகுதியில் அதிக அளவில் விபத்துகள் ஏற்பட்டு வந்ததால், சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மாவட்ட சாலை பாதுகாப்புக் குழு கூட்டத்தில் தொடர்ந்து வலியுறுத்தினோம். தற்போது சர்வீஸ் சாலை அமைக்கும் பணிகள் முடிந்து வாகனங்கள் சென்று வருகின்றன.

ஆனால், இந்த சாலையை பயன்படுத்தாமல், சமயபுரம் சென்று வரும் நகரப் பேருந்துகள் மீண்டும் பழைய முறையிலேயே தேசிய நெடுஞ்சாலையை குறுக்காக கடக்கின்றன. இதனால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து, காவல்துறை மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய வட்டாரத்தில் கேட்டபோது, ‘‘சமயபுரத்திலிருந்து திருச்சி வரும் வழியில் சாலையின் நடுவே வாகனங்கள் கடக்கும் வழியை அடைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றனர்.

- எஸ்.கல்யாணசுந்தரம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x