Published : 26 Nov 2019 04:53 PM
Last Updated : 26 Nov 2019 04:53 PM

யோகாசனம் கின்னஸ் சாதனை மாணவி வைஷ்ணவி

யோகாசனத்தில் கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளார், கோவை பள்ளி மாணவி வைஷ்ணவி.கோவை கருமத்தம்பட்டியைச் சேர்ந்த வி.சரவணக்குமார்-எஸ்.விமலா தம்பதியின் மூத்த மகள் எஸ்.வைஷ்ணவி (16). இவர் யோகாசன வீராங்கனையாவார்.

கின்னஸ் உலக சாதனை தினத்தை முன்னிட்டு, கடந்த 14-ம் தேதி பள்ளி நிர்வாகத்தின் ஏற்பாட்டில் கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மாணவி எஸ்.வைஷ்ணவி யோகாசனத்தில் முந்தைய உலக சாதனைகளை முறியடித்து, புதிய சாதனை நிகழ்த்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

இதன்படி 1.சர்க்கர சுழல் நிலையில் 20 மீட்டருக்கு மேல் பயணித்தல், 2. செலபாசன நிலையில் 26 நிமிடங்கள் இருத்தல், 3. பிம்பாசன நிலையில் முதுகு தண்டு மூலமாக விரைவாக 3 பலூன்களை வெடிக்கச் செய்தல், 4. சர்க்கர கோனாசன நிலையில்1.28 நிமிடம் நிற்றல் ஆகிய 4 சாதனை முயற்சிகளை மேற்கொண்டு, முந்தையை சாதனைகளை முறியடித்து, புதிய சாதனை படைத்தார்.

இது குறித்து மாணவி எஸ்.வைஷ்ணவி கூறியதாவது: என்னுடைய தந்தை வி.சரவணக்குமார் யோகா பயிற்றுநர் என்பதால், சிறு வயதிலேயே எனக்கும் யோகாசனம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டு, தந்தையிடம் யோகா கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். 5-ம் வகுப்பு படிக்கும்போது யோகாசனப் போட்டியில் பங்கேற்றபோது, எனக்கு பரிசு ஏதும் கிடைக்கவில்லை.

அதைத்தொடர்ந்து திருப்பூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்ற போது இரண்டாம் பரிசு கிடைத்தது, ஆறுதலாக இருந்தது. அதன்பின்னர் மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பதக்கங்கள் குவித்து வருகிறேன்.

கடந்த அக்டோபர் மாதம் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான யோகாசன போட்டியில் அத்லடிக்ஸ், ஆர்ட்டிஸ்டிக்ஸ் பிரிவுகளில் பங்கேற்று இரு தங்கப்பதக்கங்கள் வென்றேன். அதற்கு முன் ஜூலை மாதம் ஐரோப்பாவில் நடைபெற்ற சர்வதேச போட்டியிலும், இதே பிரிவுகளில் தங்கப்பதக்கங்கள் வென்றேன்.

கடந்த 2018-ம் ஆண்டு கின்னஸ் உலக சாதனை தினத்தையொட்டி, யோகாசனம் செய்தபடியே கால்களால் 6 முட்டைகளை உடையாமல் எடுத்து ஒரு குடுவைக்குள் வைத்தேன். அது உலக சாதனையாக பதிவாகி கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றது.தற்போது நிகழ்த்திய 4 யோகாசன முயற்சிகளும், முந்தையை சாதனைகளை முறியடித்துள்ளன. இவை உலக சாதனையில் இடம் பெற்றுள்ளன. விரைவில் கின்னஸ் புத்தகத்தில் மீண்டும் இடம்பெறுவேன் என்றார்.

- த.சத்தியசீலன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x