

வெப்பச் சலனம் காரணமாக கடலோர மாவட்டங்களிலும், உள்மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று (நவ.26) சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
"அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதியில் லேசான மழை பெய்யும்.
சூறைக்காற்று வீச வாய்ப்பிருப்பதால், மீனவர்கள் அடுத்த 24 மணிநேரத்திற்கு குமரிக்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக செய்யூரில் 7 செ.மீ., ராமநாதபுரத்தில் 4 செ.மீ., ராமேஸ்வரத்தில் 4 செ.மீ., மண்டபத்தில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது".
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.