Published : 26 Nov 2019 09:47 AM
Last Updated : 26 Nov 2019 09:47 AM

ரயில்வே துறை பராமரிப்புப் பணிகள் தனியார்மயமாகின்றதா? - வைகோ கேள்விக்கு பியூஷ் கோயல் பதில்

ரயில்வே துறை பராமரிப்புப் பணிகள் தனியார்மயமாகின்றதா என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எழுப்பிய கேள்விக்கு அத்துறையின் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பதில் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநிலங்களவை உறுப்பினர் வைகோ எழுப்பிய கேள்விகள்:

ரயில்களில் உணவுக்கூடங்களையும், கழிவறைகளின் பராமரிப்புப் பணிகளையும் கைவிட, ரயில்வே துறை தீர்மானித்துள்ளதா?

ரயில் பெட்டிகளின் தூய்மை, கழிவறைகளின் பராமரிப்பு குறித்து, எத்தனை பேர் குறைகளைத் தெரிவித்துள்ளனர்? அதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

ரயில் பெட்டிகளைத் தூய்மையாகப் பராமரிப்பதற்காக, மாற்று ஏற்பாடுகள் ஏதேனும் செய்யப்படுகின்றனவா? ஓடுகின்ற ரயில்களில் மூட்டைப் பூச்சிகள், கரப்பான், எலிகள் ஊர்வது குறித்துக் குறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளனவா?

வைகோவின் இந்தக் கேள்விகளுக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அளித்துள்ள விளக்கம்:

"ரயில்களில் உணவுக்கூடங்களையும், கழிவறைகளின் பராமரிப்புப் பணிகளையும் கைவிட, ரயில்வே துறை தீர்மானிக்கவில்லை. ரயில் பெட்டிகளின் தூய்மை குறித்து, கடந்த மூன்று ஆண்டுகளில், பல்வேறு தரப்பினரிடம் இருந்து 60,000-க்கும் மேற்பட்ட குறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பயணிகள் கூறுகின்ற குறைகளைத் தீர்த்து வைப்பதற்கு, பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்தப் பணிகள் மேற்பார்வை செய்யப்படுகின்றன. ஒப்பந்தப்படி தூய்மைப் பணிகளை மேற்கொள்ளாத நிறுவனங்கள் மீது, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ரயில் பெட்டிகள், கழிவறைகளின் தூய்மைப் பணிகள் இரு வகைகளில் மேற்கொள்ளப்படுகின்றன. பணியாளர்கள் வேலை செய்கின்றார்கள். தேவையான கருவிகளும் உள்ளன.

தலைநகர் விரைவு ரயில்கள், நூற்றாண்டு ரயில்கள் போன்ற முதன்மையான, நெடுந்தொலைவு ஓடுகின்ற 1090 வரைவு ரயில்களில், இருமுனை வழிகளிலும், வண்டிகள் ஓடிக்கொண்டு இருக்கும்போதே தூய்மைப் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன. கழிவறைகள் கழுவப்படுகின்றன. கதவுகள் துடைக்கப்படுகின்றன.

பெட்டி நண்பன் என்ற திட்டம் உள்ளது. அதன்படி, 1050 ரயில்களில், இருமுனை வழிகளிலும், தூய்மைப் பணிகள், நோய்த்தொற்றுக் கிருமிகள் அழிப்பு, சணல் துடைப்பான்கள், விளக்குகள், குளிர்பதனப் பணிகள், தண்ணீர் நிரப்புதல் போன்ற, பயணிகளுக்கு உதவுகின்ற ஒற்றைச் சாளர இடைமுக ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

தூய்மையான ரயில் நிலையம் என்று ஒரு திட்டம் உள்ளது. இந்த நிலையங்களில், வண்டிகள் நிற்கும்போது செய்ய வேண்டிய தூய்மைப் பணிகள், உரிய கருவிகளைக் கொண்டு செய்யப்படுகின்றன.

மூட்டைப் பூச்சி போன்ற சிறுசிறு பூச்சிகளைக் கட்டுப்படுத்துகின்ற மருந்துகள், தொடர்ச்சியான இடைவெளிகளில் பெட்டிகளில் தெளிக்கப்படுகின்றன. அந்தப் பணிகளை, பயிற்சி பெற்ற, திறமையாகச் செயல்படுகின்ற நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. ஒட்டுண்ணி உயிரிகளைக் கட்டுப்படுத்தும் புகை மூட்டப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

முன்பு, குளிரிப் பெட்டிகளில் மட்டுமே குப்பைக் கூடைகள் வைக்கப்பட்டு இருந்தன. இப்போது, அனைத்துப் பெட்டிகளிலும் வைக்கப்படுகின்றன.

ரயில் பெட்டிக் கழிவறைகளின் மனிதக் கழிவுகள், முன்பு ரயில் தடங்களிலேயே கொட்டப்பட்டு வந்தது. இப்போது, பெட்டிகளிலேயே சேகரிக்கப்பட்டு, பின்னர் அகற்றப்படுகின்றன.

ஏதேனும் குறைகள் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டால், அது தொடர்பான அலுவலர்கள், மேற்பார்வையாளர்களது நடவடிக்கைகள், உரிய அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படுகின்றன.

ரயில் பெட்டிகளின் தூய்மைப் பணிகளுக்கு, பயணிகளின் ஒத்துழைப்பைப் பெறுகின்ற வகையில், போதிய விழிப்புணர்வுப் பரப்புரைகளும் செய்யப்படுகின்றன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x