Published : 26 Nov 2019 08:03 AM
Last Updated : 26 Nov 2019 08:03 AM

உலகத்துக்கே அச்சுறுத்தலாக விளங்கும் பருவநிலை மாற்றத்துக்கு தீர்வுகாண வேண்டும்: மாணவர்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் அறிவுரை

சென்னை

உலகத்துக்கே அச்சுறுத்தலாக விளங்கும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான ஆய் விலும், தீர்வுகளை கண்டுபிடிப் பதிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளிடம் அறிவியல் ஆர் வத்தை ஏற்படுத்தும் நோக்கில், ‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ என்ற திட்டத்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு துறை விஞ்ஞானிகள் மூலம் அறிவியல், ஆராய்ச்சி, அதன் மூலம் உலக மக்களுக்கு கிடைக்கும் பயன் கள் குறித்து விழிப்புணர்வு ஏற் படுத்தப்படுகிறது.

அறிவியல் சார்ந்த கலந்துரை யாடல்கள் நடத்தப்படுகின்றன. அறிவியல் சார்ந்த படைப்புகள் உருவாக்கம் குறித்தும் மாணவர் களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்திட்டம் மூலம் இதுவரை சென்னை மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த 6 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இத்திட்டத்தின் தொடர்ச்சியாக, ‘குழந்தைகளும், பருவநிலை மாற்றத்தை எதிர் கொள்வதற்கான ஆய்வும்’ என்ற நிகழ்ச்சி சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் அறக் கட்டளை அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பேசியதாவது:

குழந்தைப் பருவத்திலேயே அறிவியல் மீது ஆர்வம் ஏற் பட்டால், பிற்காலத்தில் அவர்கள் சிறந்த விஞ்ஞானிகள் ஆக முடியும். வருங்காலத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, பல சாத னைகளையும் படைக்க முடியும்.

5 வகையான நிலங்கள்

சமீபகாலமாக பருவநிலை மாற்றம் அனைத்து நாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. அதை எதிர்கொள்வதற்கான ஆய் விலும், தீர்வுகளை கண்டுபிடிப் பதிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

நிலங்களில் பல வகைகள் உள்ள நிலையில், அவற்றுக்கு பொதுவான தீர்வு பலன் தராது. தமிழகத்தை பொறுத்தவரை சங்க இலக்கியங்களில் குறிப்பிட் டுள்ளபடி குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என 5 வகையாக நிலங்களை வகைப்படுத்தி, அதற்கு ஏற்ற வகையில் தீர்வுகளை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், பருவநிலை மாற் றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மாணவர்கள் உருவாக்கிய படைப் புகளை எம்.எஸ்.சுவாமிநாதன் பார் வையிட்டு வாழ்த்தினார்.

வியக்க வைத்த நுண்ணோக்கி

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், அமெரிக்காவில் இருந்து வர வழைக்கப்பட்ட மலிவு விலை நுண் ணோக்கி தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டது. ஈ, கொசுக்களின் இறகுகள், இலைகள் ஆகிய வற்றை அதன்மூலம் உருப்பெருக் கம் செய்து பார்த்து மாணவ, மாணவிகள் வியந்தனர். அனை வருக்கும் சான்றிதழ்களையும் எம்.எஸ்.சுவாமிநாதன் வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னை கோட்டூர் மாநகராட்சிப் பள்ளி மாணவி கே.மதுமிதா கூறும்போது, ‘‘தனித்தனியாக இருந்த பாகங்களை இணைத்து, நுண்ணோக்கியை உருவாக்கியதே புது அனுபவமாக இருந்தது.

அதன் வழியாக இலைகளை பார்த்தேன். இதுவரை காணாத அதிசயக் காட்சியை பார்த்து ஆச் சரியப்பட்டேன். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளிக் கிறது. இதன்மூலம் அறிவியல் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது’’ என்றார்.

நிகழ்ச்சியில் எம்.எஸ்.சுவாமி நாதன் அறக்கட்டளையின் முதன்மை விஞ்ஞானி எஸ்.மலர் வண்ணன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் மொ.பாண்டியராஜன் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x