Published : 25 Nov 2019 04:27 PM
Last Updated : 25 Nov 2019 04:27 PM

இனி அனைத்தும் தமிழில்: டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு

காவல்துறை தகவல்கள், கடிதப் பரிமாற்றம், அரசு முத்திரை, பெயர்ப் பலகை, கையொப்பம் என அனைத்தும் தமிழில்தான் இருக்க வேண்டும் என டிஜிபி திரிபாதி அனைத்து காவல் ஆணையர்கள், ஐஜிக்கள், மாவட்ட எஸ்.பி.க்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழில் அரசு குறிப்பாணை, உத்தரவு, கடிதம் என அனைத்தும் இருக்கவேண்டும் என்பது அனைவரின் வேண்டுகோள் ஆகும். ஆனால் நடைமுறையில் மிகவும் குறைவு. தற்போது காவல்துறையில் அரசுத்துறைகள்போலவே பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருக்கும்.

இதை மாற்றும் வகையில் சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி ஒரு சுற்றறிக்கையை அனைத்து காவல் ஆணையர்கள், டிஜிபிக்கள், ஏடிஜிபிக்கள், மண்டல ஐஜிக்கள், மாவட்ட எஸ்.பி.க்கள், காவல் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார்.

அதில், இனி காவல்துறை தகவல்கள், கடிதப் போக்குவரத்து, கையொப்பம், பெயர்ப் பலகை உள்ளிட்ட அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்த டிஜிபி திரிபாதி அறிக்கை:

''தமிழ் வளர்ச்சித் துறை இயக்ககம் நவ. 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சி ஆட்சிமொழி திட்ட செயலாக்க ஆய்வு மேற்கொண்டது. இது தொடர்பாக தமிழ் வளர்ச்சித் துறை பணியாளர்களைத் தங்கள் இருக்கையில் பராமரிக்கும் தன் பதிவேடு, முன் கொணர்வு பதிவேடு மற்றும் அனைத்துப் பதிவுகளையும் தமிழ் மொழியில் பராமரிக்க வேண்டும்.

வருகைப் பதிவேட்டில் தமிழில் கையொப்பம் இட வேண்டும். அனைத்து வரைவு கடிதத் தொடர்புகளும், குறிப்புகளும் தமிழில் எழுதப்பட வேண்டும். மேலும் அனைத்து காவல் வாகனங்களுக்கும் தமிழில் காவல் என்று இடம் பெற்றிருக்க வேண்டும். அனைத்து அலுவலக முத்திரைகளும் மற்றும் பெயர்ப் பலகையும் தமிழில் மாற்றப்பட வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளனர்.

மேற்கண்ட பொருள் தொடர்பாக தலைமை அலுவலக அனைத்துப் பணியாளர்களுக்கும், பிற காவல் அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களுக்கும் உரிய அறிவுரை வழங்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”.

இவ்வாறு டிஜிபி சார்பில் அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x