வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் 9 சதவீதம் குறைவு; சென்னையில் 30 செ.மீ.க்கு 8 செ.மீ. மட்டுமே பதிவு: வானிலை ஆய்வு மையம்

வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் 9 சதவீதம் குறைவு; சென்னையில் 30 செ.மீ.க்கு 8 செ.மீ. மட்டுமே பதிவு: வானிலை ஆய்வு மையம்
Updated on
1 min read

வடகிழக்குப் பருவமழை இதுவரை தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மட்டுமே அதிக மழைப்பொழிவைத் தந்துள்ளது. வட மாவட்டங்களில் குறைவாக இருப்பதால் மொத்த மழைப்பொழிவு 9 சதவீதம் குறைவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

“தமிழகம் மற்றும் புதுவை கடலோர மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பச் சலனத்தின் காரணமாக லேசானது முதல் மிதமான மழையும், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மற்றும் தங்கச்சிமடத்தில் 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு குமரி கடல் பகுதியில் சூறாவளிக் காற்று வீச வாய்ப்பிருப்பதால் மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு குமரி கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நவம்பர் மாதத்தில் பெய்த மழையின் விவரம் தமிழகம் முழுவதும் எதிர்ப்பார்க்கப்பட்ட மழை அளவு 16 செ.மீ. ஆனால் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. புதுவையில் எதிர்பார்க்கப்பட்ட மழையின் அளவு 34 செ.மீ. பெய்த அளவு 13 செ.மீ.

சென்னைக்கு வடகிழக்குப் பருவமழை தொடங்கிய அக்.1 முதல் இன்று வரை எதிர்பார்க்கப்பட்ட மழையின் அளவு 30 செ.மீ. பெய்த மழை அளவு 8 செ.மீ. இது நவம்பர் மாதத்துக்கு மட்டும்.

ஒட்டுமொத்தமாக அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து தற்பொழுது நவம்பர் மாதம் இன்றைய தேதி வரை தமிழகத்துக்குக் கிடைக்கவேண்டிய மழை அளவில் 9 சதவீதம் குறைவாகப் பதிவாகியுள்ளது. 34 செ.மீ. பதிவாகியிருக்கவேண்டும். அதிகபட்ச மழை முழுதும் தென் மாவட்டங்களில் பதிவாகியுள்ளது. வட மாவட்டங்களில் மழை குறைவாக இருப்பதால் இந்தப் பற்றாக்குறை தெரியவருகிறது”.

இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in