Last Updated : 25 Nov, 2019 01:07 PM

 

Published : 25 Nov 2019 01:07 PM
Last Updated : 25 Nov 2019 01:07 PM

மேலவளவு கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 13 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மேலவளவு கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 13 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், மேலூர் டி.எஸ்.பி அதனை கொண்டு சேர்ப்பதை உறுதிப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1996 ஆம் ஆண்டு ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக முருகேசன் உட்பட 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அதனை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.

ஏற்கெனவே, அண்ணா பிறந்தநாளில் அவர்களில் மூன்று பேர் நன்னடத்தைக் காரணமாக முன்விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள 14 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 பேர் முன்விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வழக்கறிஞர் ரத்தினம் அதனை எதிர்த்து வழக்கு தொடர, விடுதலை செய்யவதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணை தேவை என்பதால் அதன் நகலை வழங்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அரசாணை நகல் வழங்கப்பட்டதோடு, வழக்கின் கோரிக்கையை மாற்ற மனு செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது.

அதனடிப்படையில், " 13 பேர் விடுதலை செய்யப்பட்டது, அநீதியனாது. ஆதிதிராவிட மக்களுக்கான நீதியையும், அவர்களுக்கு எதிரான குற்றத்தின் தன்மையையும் கருத்தில் கொள்ளாமல் 13பேரையும் அரசு விடுவித்துள்ளது. இதனால் மேலவளவில் வசிக்கும் ஆதிதிராவிட மக்கள், அச்சத்துடனேயே உள்ளனர்.

அத்துடன், அரசாணையில் பாரத ரத்னா என்பது போன்ற விருது, பட்டங்களின் தகவல்கள் இடம்பெறக்கூடாது என்பது உச்சநீதிமன்ற உத்தரவு. ஆனால் 13 பேர் விடுதலை தொடர்பான அரசாணையில் பாரத ரத்னா என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மேலவளவு கொலை தொடர்பான வழக்கில், எனது மனுவை பரிசீலிக்குமாறு அறிவுறுத்திய நீதிமன்ற உத்தரவும் பின்பற்றப்படவில்லை. ஆகவே, மேலவளவு கொலை வழக்கில் 13 பேர் விடுதலை செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் " எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 13 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பவும், மேலூர் டி.எஸ்.பி அதனை கொண்டு சேர்ப்பதை உறுதிப்படுத்தவும் உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அன்றைய தினம் அரசுத்தரப்பில் நிலை அறிக்கை, முன்கூட்டியே விடுதலை செய்யப்பட தயாரிக்கப்பட்ட பட்டியல் உள்ளிட்டவற்றை தாக்கல் செய்ய ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x