Last Updated : 25 Nov, 2019 12:16 PM

 

Published : 25 Nov 2019 12:16 PM
Last Updated : 25 Nov 2019 12:16 PM

'மதுரை அதிமுக அமைச்சர் மிரட்டுகிறார்': பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு

பேராசிரியை நிர்மலா தேவி மீது ஆசிட் வீசி கொலை செய்துவிடுவதாகக் கூறி மதுரையைச் சேர்ந்த அதிமுக அமைச்சர் மிரட்டுவதாக, நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

முன்னதாக, கடந்த 18-ம் தேதி (நவ.18) நீதிமன்றத்தில் ஆஜராகாத நிர்மலா தேவிக்கு மாவட்ட மகிளா நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய ஜாமினை ரத்து செய்து பிடிவாரண்டு பிறப்பித்து இருந்தது.

இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) சிபிசிஐடி போலீஸார் நிர்மலா தேவியை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், "எனது கட்சிக்காரரை ஒரு கடத்தல்காரர் போல் சிபிசிஐடி போலீஸார் மறைத்து ஆஜர்படுத்துகின்றனர்.

என்னிடம் நிர்மலா தேவி நேற்றிரவு பேசினார். தான் இன்று காலை 9 மணிக்கு நீதிமன்றத்திற்கு வந்து நீதிபதி முன்பு சரணடையவுள்ளதாகக் கூறினார்.

ஆனால், தற்போது சிபிசிஐடி போலீஸார் அவரை நீதிமன்றத்திற்கு வரும்போதே கைது செய்து அழைத்து வந்தது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

ஏற்கெனவே, நிர்மலாதேவி தன்னை மதுரையைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் மிரட்டுவதாகக் கூறியுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜரானால் அவரது குடும்பத்தைச் சீரழித்து விடுவதாகவும் அவரது குழந்தைகளைக் கடத்திவிடுவதாகவும் மேலும் அவர்மீது ஆசிட் ஊற்றி கொலை செய்து விடுவதாகவும் கூறி மிரட்டி வருவதாகவும் என்னிடம் புலமிபிவருகிறார்.

இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வந்த நிர்மலாதேவி கைது செய்யப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. குறிப்பாக இன்று சிபிசிஐடி போலீஸாரால் அழைத்துவரப்பட்ட நிர்மலாதேவி நீதிமன்றத்தை விட்டு வெளியே வரும்போது அழுது கொண்டே சென்றார். அது மேலும் சந்தேகங்களை எழுப்புகிறது" எனக் கூறினார்.

மதுரையைச் சேர்ந்த அமைச்சர் யார் என்பது குறித்து கேட்டபோது அந்த அமைச்சர் வருடத்தில் பாதி நாட்கள் தாடி வைத்து சாமியாராக இருப்பதாகவும் மீதி நாட்கள் சாதாரணமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x