

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்:
''கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வந்த மழை அடுத்த இரண்டு நாட்களுக்குக் குறையும். அதன் பின்னர் மீண்டும் மழையின் தாக்கம் தமிழகத்தில் இருக்கும்.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக காரைக்காலி 9 செ.மீ. மழை, அண்ணா பல்கலைக்கழகத்தில் 5 செ.மீ. மழை, நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் 4 செ.மீ. மழை, புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் பதிவாகும்.
வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது''.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.