Published : 25 Nov 2019 10:20 AM
Last Updated : 25 Nov 2019 10:20 AM

கொடைக்கானலில் பகலிலேயே பனிமூட்டம்: இயற்கை அழகை ரசிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

கொடைக்கானலில் பகலிலேயே பனிமூட்டம் அதிகமாகக் காணப் பட்டதால் இயற்கைக் காட்சிகளைப் பார்த்து ரசிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கொடைக்கானலுக்கு கோடை சீசனில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். தற்போது மிதமான குளிர் நிலவுவதால் வெளி மாநில, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

வடகிழக்குப் பருவ மழை கடந்த மாதம் தொடங்கியபோது கொடைக்கானல் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. தற்போது அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் கொடைக் கானலில் குளிர் நிலவுகிறது.

பகலிலேயே சாலைகள் மற்றும் பசுமைப் பள்ளத்தாக்கு, தூண் பாறை ஆகிய பகுதிகள் முற்றிலும் தெரியாத அளவுக்கு பனிமூட்டமாக இருந்தது. பிரையண்ட் பூங்கா, ஏரியைக்கூட சில நேரங்களில் காண முடியாத வாறு மேகக்கூட்டங்கள் நிரம்பியி ருந்தன. இதனால் கொடைக்கானல் வந்த சுற்றுலாப் பயணிகள் இயற்கை அழகைப் பார்த்து ரசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்கை எரியவிட்டு வாக னங்கள் மெதுவாகச் சென்றன. கொடைக்கானலில் நேற்று பகலில் 16 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. காற்றில் ஈரப்பதம் 82 சதவீதம் இருந்ததால் குளிர் உணரப்பட்டது. இரவில் குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் வரை சென்றதால் கடும் குளிர் நிலவியது.

சுற்றுலாப் பயணிகள் பலரும் இக்குளிரைத் தாங்க முடியாமல் ஒரே நாளில் கொடைக்கானலில் இருந்து புறப்பட்டனர். இனிவரும் நாட்களில் வெப்பநிலை மேலும் குறைந்து கடும் குளிர் நிலவ வாய்ப்புள்ளது என வானிலை நிலவரம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x