Published : 24 Nov 2019 04:13 PM
Last Updated : 24 Nov 2019 04:13 PM

காபியுடன் சேர்ந்து கஞ்சா: அஞ்சல் பார்சல்களில் அனுப்பியபோது சிக்கியது 

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

வெளிநாட்டு அஞ்சல் பார்சல்களில் இருந்த கஞ்சாப் பொருளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

வெளிநாட்டு அஞ்சல் பார்சல்கள் மூலம் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அஞ்சல் துறையில் உள்ள புலனாய்வு அதிகாரிகள் கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வந்த அஞ்சல் பார்சல்களை அஞ்சலகப் புலனாய்வு அதிகாரிகள் இடைமறித்துப் பரிசோதனை செய்தனர்.

இந்தப் பரிசோதனையின் போது, ஒட்டி சீலிடப்பட்ட பிளாஸ்டிக் பைகளுக்குள் பச்சை நிற காய்ந்த இலைகளைத் திணித்து பல அடுக்குகளில் வைத்திருந்தது தெரியவந்தது. இந்த இலைகளின் மாதிரிகளை சோதனை செய்ய, போதைப் பொருட்கள் ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. அங்கு இந்தப் பொருட்கள் தடை செய்யப்பட்ட கஞ்சா வகையைச் சேர்ந்தவை என சான்றளிக்கப்பட்டது.

கஞ்சாப் பொருட்கள் கண்டறியப்படுவதைத் தடுக்கும் வகையில், பல அடுக்குகள் கொண்ட பிளாஸ்டிக் கவர்களில் காப்பித்தூளும், கஞ்சாவும் மாற்றி மாற்றி வைக்கப்பட்டிருந்தன. மேலும் இந்த பார்சல்கள் இணையதளம் வழி புக்கிங் செய்யப்பட்டதும், க்ரிப்டோ முறையில் பணம் செலுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது. தனிநபர் பயன்பாட்டுக்காக சிறிய அளவிலான பாக்கெட்டுகளில் இவை கடத்தி வரப்பட்டதாகத் தெரிகிறது.

கனடா, அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் சிலவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டதால், இந்த நாடுகளில் இருந்து கஞ்சா கடத்தப்படுவது அதிகரித்திருப்பதாகக் கருதப்படுகிறது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என சென்னை சர்வதேச விமான நிலையத்தைச் சேர்ந்த சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x