

சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, , ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
* விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றிக்கு பாடுபட்ட ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்சுக்கு பாராட்டு.
* இலங்கை தமிழர்கள் சம உரிமை பெற்று வாழ்வதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை.
* மருத்துவ பட்ட மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.
* மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி
* சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்டிய மத்திய அரசுக்கு நன்றி
* அதிமுக அரசின் சாதனைகளை மறைக்க முயலும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கண்டனம்
* இருமொழிக் கொள்கை, மாநில சுயாட்சி, அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் கல்விமுறையில் அதிமுக அரசு பயணிக்கும் என்பதில் உறுதி.
* உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றிக்கு தொண்டர்கள் அனைவரும் உழைத்திட வேண்டும்
* நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்,
உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.