ராணுவ தலைமைத் தளபதி என்ற புதிய பொறுப்பு? - வைகோ கேள்விக்கு மத்திய இணையமைச்சர் பதில்

வைகோ: கோப்புப்படம்
வைகோ: கோப்புப்படம்
Updated on
1 min read

தலைமைத் தளபதி என்ற புதிய பொறுப்பை மத்திய அரசு உருவாக்கப் போகின்றதா என, வைகோ கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்தியப் படைக்கு தலைமைத் தளபதி என ஒருவரை அறிவிக்க மத்திய அரசு தீர்மானித்து உள்ளதா என, வைகோ ஏற்கெனவே கேள்வியெழுப்பியிருந்தார்.

இதுதொடர்பாக வைகோ எழுப்பிய கேள்விகள்:

தலைமைத் தளபதியின் பொறுப்புகளை வரையறை செய்வற்காக, ஏதேனும் குழு அமைக்கப்பட்டு இருக்கின்றதா?

தலைமைத் தளபதி என்ற பொறுப்பு, தற்போது உள்ள இந்தியப் படை அதிகாரப் பொறுப்புகளின் சமநிலையைச் சீர்குலைக்குமா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றதா?

இந்தியப் படைச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக, கால வரையறை செய்யப்பட்டுள்ளதா? தற்போது பொறுப்பில் உள்ள முப்படைத் தளபதிகளின் பணிகளோடு இயைந்தவாறு அமையுமா?

ஆணை இடுவதும், கட்டுப்படுத்துவதுமான அதிகாரங்கள் தீர்மானிக்கப்பட்டு உள்ளனவா?

ஆகிய கேள்விகளை வைகோ எழுப்பினார்.

இக்கேள்விகளுக்கு பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் அளித்து இருக்கின்ற விளக்கங்கள்:

"தலைமைத் தளபதி என்ற பொறுப்பை உருவாக்குவது குறித்து, கொள்கை அளவில் அரசு தீர்மானித்து உள்ளது. அதைச் செயல்படுத்துவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு இருக்கின்றது.

தலைமைத் தளபதியின் பொறுப்புகள், அந்தப் புதிய பொறுப்பின் செயல்பாட்டு எல்லைகளை வரையறுப்பதும், இந்த முடிவை இணக்கமாகச் செயல்படுத்துவதற்கு உரிய வழிமுறைகளையும் அந்தக் குழு ஆய்வு செய்து வருகின்றது.

கார்கில் மறுஆய்வுக் குழு, அமைச்சர்களின் ஆய்வு அறிக்கைகள், நாட்டின் பாதுகாப்பு குறித்த பணிக்குழு, சேகத்கர் குழு ஆகியவை மேற்கொண்ட ஆய்வுகளின்படி அளித்த அறிக்கைகளில், தலைமைத் தளபதி, பணியாளர் குழுத் தலைவர்களுக்கு பொதுவாக ஒரு தலைவர் என்ற புதிய பொறுப்புகளை உருவாக்குவது குறித்து பரிந்துரை செய்யப்பட்டு இருக்கின்றது.

இந்தியப் படைச் சீர்திருத்தப் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காலத்தின் தேவைகளுக்கு ஏற்றவாறு, சீர்திருத்த நடவடிக்கைகள் அமைகின்றன," என அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in