

சிறையிலிருந்து வெளியே வந்தால் அதிமுகவினர் கட்டாயம் சசிகலா கட்சியில் தான் இணைவார்கள் என தான் எதிர்பார்ப்பதாக, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று (நவ.23) சுப்பிரமணிய சுவாமி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
தமிழகத்தில் உள்ள அரசியல் வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் என நினைக்கிறீர்களா?
சினிமா நடிகர்கள் தமிழ்நாட்டுக்காக ஒன்றும் செய்ய முடியாது. அவருடைய திரைப்படம் வெளியீடு நெருங்குவதால் பப்ளிசிட்டிக்காக செய்யலாம். "நான் அரசியலுக்கு வருவேன்" என எத்தனை தடவை ரஜினி கூறியிருக்கிறார்? ஆனால், கடைசியில் ஒன்றும் நடக்கவில்லை.
கமல்-ரஜினி மக்கள் நலனுக்காக இணைவோம் என கூறியிருக்கிறார்களே?
அவர்களின் சினிமா வசனங்களைக் கேட்டு எனக்கு அலுத்துப் போய் விட்டது.
சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவார் என தகவல் வருகிறதே?
அதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. அவரை சிறைக்கு அனுப்பியதில் என்னுடைய வழக்கும் இருந்தது. அவரின் தண்டனைக் காலம் முடிவதற்கே இன்னும், ஒரு வருடம் தான் இருக்கிறது. கட்சியை நல்ல அமைப்புடன் நடத்துவதற்கான திறமை சசிகலாவிடம் உள்ளது. சிறையிலிருந்து வெளியே வந்தால் அதிமுகவினர் கட்டாயம் சசிகலா கட்சியில் தான் இணைவார்கள் என நான் எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.