Published : 23 Nov 2019 10:34 AM
Last Updated : 23 Nov 2019 10:34 AM

இளையான்குடியில் ஆசிரியர்கள் வலியுறுத்தலால் பள்ளி நேரத்தில் பனை மட்டை வெட்டிய மாணவர்கள்: கல்வி அதிகாரிகளிடம் கிராம மக்கள் புகார்

சிவகங்கை மாவட்டம், இளையான் குடி அருகே சாலைக்கிராமம் அரசு பள்ளி மாணவர்களை பனை மட்டை வெட்டி எடுத்துவரச் சொல்லி வெளியில் அனுப்பிய ஆசிரியர்கள் மீது கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இளையான்குடி அருகே சாலைக்கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 560 மாணவர்கள் படிக்கின்றனர். சமீபகாலமாக அம்மாணவர்களை அடிப்பதற்கு பனை மட்டையை பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில், நேற்று அப்பள்ளியைச் சேர்ந்த 2 மாணவர்கள் பள்ளி நேரத்தில் பனைமரத்தில் ஏறி பனை மட்டை வெட்டியுள்ளனர்.

இதுகுறித்து கிராம மக்கள் மாணவர்களிடம் விசாரித்தபோது, மாணவர்களை அடிப்பதற்காக ஆசிரியர்கள் பனை மட்டை வெட்டி எடுத்து வரச் சொன்னதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து பள்ளி நேரத்தில் பனை மட்டை வெட்ட அனுப்பி வைத்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வாட்ஸ்ஆப்பில் கல்வித்துறை அதிகாரிகளுக்கு கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கிராம மக்கள் கூறுகையில், மாணவர்கள் பனை மரத்தில் ஏறும்போது தவறிவிழ வாய்ப்புள்ளது. மேலும் பள்ளி நேரத்தில் பனை மட்டை வெட்ட ஆசிரியர்கள் அனுப்பியது தவறு. மாணவர்களை அனுப்பிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இது தொடர்பாக விசாரித்து நடவடக்கை எடுக்கப் படும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x