Published : 23 Nov 2019 10:21 AM
Last Updated : 23 Nov 2019 10:21 AM
மதுரை
தமிழகத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தைச் செயல்படுத்துவதில் மதுரை மாநகராட்சி 8-வது இடத்தில் உள்ளது. கோவை முதலிடத்திலும், சென்னை இரண்டாவது இடத்திலும் உள்ளன.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், தூத்துக்குடி, சேலம், திருநெல் வேலி, திருச்சி உள்ளிட்ட 11 மாநகராட்சிகளில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் முதற்கட்டமாக அறிவித்த ‘ஸ்மார்ட் சிட்டி’ பட்டியலில் சென்னை, கோவை மட்டுமே இடம்பெற்றிருந்தன. 2017-ல் அறிவித்த இரண்டாவது பட்டியலில் மதுரை இடம் பெற்றது.
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில், மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றிய வீதிகள், மாரியம்மன் தெப்பக்குளம், பெரியார் பேருந்து நிலையம், வைகை ஆறு உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் வகையில் 14 திட்டங்கள் ரூ.1012 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் தொடங்கின. ஆனால், பணிகள் மந்தகதியில் நடக்கின்றன. பெரியார் பேருந்து நிலையக் கட்டுமானப் பணியில் தற்போது வரை குழிகள் தோண்டி கான்கிரீட் தூண்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன.
இப் பேருந்துநிலைய கட்டு மானப் பணிக்காக பேருந்துகள் அனைத்தும் கடந்த ஓராண்டாகத் திருப்பிவிடப்பட்டதால் மக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். ஆனால், பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் எப்போது நிறைவடையும் என்பது தெரியவில்லை. இதுபோன்றுதான் மற்ற ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகளும் விறுவிறுப்பு இல்லாமல் நடக் கின்றன.
தமிழகத்தில் நடக்கும் ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கடந்த வாரம் சென்னையில் நடந்தது. இதில், நடக்கும் பணிகள், நிறைவடைந்த பணிகளை ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டதில் ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகள் நடக்கும் 11 மாநகராட்சிகளில் மதுரை 8-வது இடத்தில் உள்ளது தெரிய வந்தது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப்பணிகள் வேகமாக நடப்பதில் கோவை முதலிடத்தில் உள்ளது. அங்கு மொத்தமுள்ள 49 திட்டங்களில் 18 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. அடுத்து சென்னையில் 41 திட்டங்களில் 18 திட்டங்களும், தூத்துக் குடியில் 47 திட்டங்களில் 14 திட்டங்களும், சேலத்தில் 53 திட்டங்களில் 8 திட்டங்களும் நிறைவடைந்துள்ளன.
மதுரையில் 14 திட்டங்கள்தான் ‘ஸ்மார்ட் சிட்டி’ பட்டியலில் உள்ளன. இதில், மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் வளாகத்தில் உள்ள ‘ஸ்மார் சிட்டி’ பழ மார்க்கெட் திட்டம் மட்டும் முடிவடைந் துள்ளது. பெரியார் பேருந்து நிலையக் கட்டுமானப்பணி 35 சதவீதமும், வைகை ஆறு திட்டம் 50 சதவீதமும், பல்லடுக்கு வாகனக் காப்பகம் 70 சதவீதமும் முடிந் துள்ளன. பாரம்பரியக் கட்டிடங்கள் மேம்படுத்தும் திட்டம் 20 சதவீதமும், சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் திட்டம் 2.65 சதவீதமும், எல்இடி தெரு விளக்குகள் பணி 29.06 சதவீதமும், குப்பைகளை உரமாக்கும் திட்டம் 24.83 சதவீதமும் நிறைவடைந் துள்ளன. மற்ற பணிகளும் குறைந்த சதவீதத்திலே முடிந்துள்ளன.
‘ஸ்மார்ட் சிட்டி’ பணிக்கான காலக்கெடு 2020-ம் ஆண்டு என தொடக்கத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், திட்டமே 2018-ல் தொடங்கியதால் இலக்கு காலம் நீட்டிக்கப்படும். கோவை, சென்னை முதல் இரண்டு இடங்களில் இருப்பதற்கு அந்த மாநகராட்சிகள் முதல் பட்டியலில் இடம்பெற்றுவிட்டன. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT